'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு
"சீ! கய்தே, இன்னாடா அப்படிப் பாக்கறே, எரிச்சுடற மாதிரி. இந்த அம்மாக்கண்ணுகிட்டே வெச்சுக்காதே உன் வேலையெல்லாம். ஆப்பக்கரண்டியாலேயே ரெண்டு போட்டுடுவேன்,ஆமாம். நெதம் நெதம் வந்து நாஷ்டா பண்ணிட்டுப் போனியே, அதைப்போல பாக்கியைக் குடுக்க புத்தி வாணாம்? அறிவு கெட்டவனே! பெரிய ஆம்பிளையாட்டமா மீசையை வச்சுக்கினு வந்துட்டான். வெக்கமில்லேடா உனக்கு?"
"மோவ், தாஸ்தி பேசாத மோவ்! பாக்கி வேணும்னா மரியாதையாக் கேட்டு வாங்கிக்கோ. நான் யார் தெரியுமா?"
"நீ யாராயிருந்தா எனக்கு இன்னாடா! பெரிய கவுணரா நீர் கயிதெ கெட்ட கேட்டுக்கு மருவாதையாம் மருவாதை! எத்தினி நாளாச்சு! மூஞ்சியைப் பாரு! துட்டை வச்சுட்டு ரிஸ்காவை இசுடா! கண் மறைவாவா சுத்திக்கினுக்கிறே?"
யாருக்கோ சவாரி போய்க்கொண்டிருந்தபோது அம்மாக்கண்ணுவின் திருஷ்டியில் எக்கச்சக்கமாக அகப்பட்டுக்கொண்டான் அந்த ரிக்ஷாக்காரன்! அம்மாக்கண்ணு குறுக்கே வந்து ரிக்ஷாவை மறித்து மடக்கிவிட்டாள். நாலு பேருக்கு முன்னால் அவள் தன்னை ஆவமானப்படுத்தியதும்