பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஐரோப்பா கண்டமாகிய மேற்குத் தேசங்களையும் ஆசியா கண்டமாகிய கிழக்குத் தேசங்களையும் தொடர்புப்படுத்தியது எகிப்து நாட்டு அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம் - அலக்சாந்திரியம். கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைத்து நடுநாயகமாக விளங்கிற்று. பலநாட்டு வாணிகரும் அந்தத் துறைமுகத்துக்கு வந்தார்கள். எல்லா நாட்டு வாணிகப் பொருள்களும் அங்கு வந்து குவிந்தன. நீலநதி, மத்தியதரைக் கடலில் கலக்கிற புகர்முகத்துக்கு அருகில், அக்காலத்து உலகத்தின் நடுமத்தியில், அலக்சாந்திரியம் அமைந்திருந்தது. அங்குக் கிரேக்கர், உரோம நாட்டார், பாபிலோனியர், பாரசீகர், அராபியர், இந்தியா, சீனர் முதலான பலநாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு வந்தனர்.

பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து இந்திய வாணிகர் அலக்சாந்திரியம் சென்றனர். ஆனால், காலஞ் செல்லச் செல்ல அராபியர் இந்திய நாட்டுப் பொருள்களைத் தாங்களே வாங்கிக்கொண்டு போய் அலக்சாந்திரியத்தில் விற்றார்கள். இதற்குக் காரணம் அலக்சாந்திரியத்துக்கும் பாரத நாட்டுக்கும் இடைமத்தியில் அரபுநாடு இருந்ததுதான். இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த அரபு நாட்டு அராபியர் கப்பல் வாணிகத்தைத் தங்கள் கையில் பிடித்துக்கொண்டார்கள். மேலும் கிரேக்க, உரோம நாட்டு யவன வாணிகர் இந்திய நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வராதபடியும் அவர்கள் செய்துவிட்டார்கள். கிரேக்க உரோம நாட்டு யவனர்கள் இந்திய நாட்டுடன் நேரடியாக வாணிகத் தொடர்பு கொண்டால் தங்களுக்குக் கிடைத்த பெரிய ஊதியம் கிடைக்காமற் போய்விடும் என்று அராபியர் அறிந்தபடியால், யவனர்களை இந்தியாவுக்கு வராதபடித் தடுத்து விட்டார்கள். அந்தக் காலத்தில் கப்பல்கள் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை யோரமாகவே பிரயாணஞ்