பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.’ (கோயிலாள் - இராணி. கோயில் - அரண்மனை. காணம்-அக் காலத்தில் வழங்கின பொற்காசு. அரசுகட்டில் சிம்மாசனம். அமைச்சு-மந்திரி பதவி).

இது, புலவர் வேறு எவரும் அடையாத பெருஞ்சிறப்பாகும். அரிசில்கிழாரைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை


உம்பற்காட்டு இளங்கண்ணனார்


ஔவையார்

ஔவை (அவ்வை) என்பது உயர்குலத்துப் பெண் பாலார்க்கு வழங்கப்படுகிற பெயர். இது இவருக்குரிய இயற் பெயர் அன்று. உயர்வைக் குறிக்கும் சிறப்புப் பெயர். ஔவையார் என்று சிறப்புப் பெயர் பெற்ற பெண்பாற் புலவர் சிலர் இருந்தனர். அவர்களில் இவர், காலத்தினால் முற்பட்டவர். கொங்கு நாட்டில் வாழ்ந்த இவர், கொங்கு நாட்டுத் தகடூரை யரசாண்ட அதிகமான் நெடுமானஞ்சியின் புலவராக இருந்தார். தகடூர், இப்போதைய சேலம் மாவட்டத்தி னின்றும் பிரிந்து தர்மாபுரி மாவட்டம் என்று பெயர் வழங்கப்படுகின்றது.

ஔவையார் முதன் முதலாக நெடுமானஞ்சியிடம் பரிசில் பெறச் சென்றபோது அவன் பரிசு தராமல் காலந்தாழ்த்தினான்.