பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

இந்தக் கேள்விக்கு விடை உடனே கிடைக்கவில்லை. "ஏன் இரண்டு பரிசல்களை அனுப்பியிருக்கக்கூடாதோ?” என்று சுந்தரம் கேட்டான்.

“அம்மா ஒரு பரிசலில் போலீஸ் வீரர்களை அனுப்புவதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். மற்றொரு பரிசல் அந்தக் குள்ளனுடைய ஆள்கள் வந்ததாக இருக்க வேணும். நாம் தப்பி வந்ததைக் குள்ளன் தெரிந்துகொண்டு நம்மைப் பிடிக்க ஆள்களை அனுப்பியிருப்பான். அவர்கள் போலீஸ்காரர்களிடம் அகப்பட்டார்களோ அல்லது போலீசார் அவர்களிடம் அகப்பட்டார்களோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர்களைக் கூப்பிடாததே நல்லதாயிற்று. திருடர்களிடம் நாம் அகப்படாமலிருக்க வேண்டுமல்லவா?" என்றான் தங்கமணி.

சரி, இப்போது என்ன செய்யலாம்?" என்று கவலையோடு கேட்டாள் கண்ணகி.

"இனி நாம் ஆற்று வழியாகப் போகாமல் இந்தக் காட்டு வழியிலே போய் எப்படியாவது கூடல் பட்டணம் போக முயற்சி செய்யலாம். புறப்படுங்கள்" என்று தங்கமணி, ஆழ்ந்த யோசனையோடு சொன்னான்.


12

"ஆளுக்கொரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள்; வழியில் பசித்தால் சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே தங்கமணி தன் கையில் தேங்காயை எடுக்கப் போனான். முன்னாலேயே அவன் நீண்ட பரிசல் கயிற்றைச் சுருட்டித் தன் தோளில் மாட்டிக்கொண்டிருந்தான்.

"நீ மட்டும் ரெண்டு தேங்காயை எடுத்துக்கொள்; உனக்கொன்று, உன் குரங்குக்கொன்று” என்றான் சுந்தரம்.

“ஜின்கா இதையும் கன்னத்தில் அடக்கிக்கொள்ளுமா?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்ணகி.

"நல்ல தமாஷாகப் பேசுகிறயே! பயமெல்லாம் நீங்கிப் போய்விட்டதா?" என்று சுந்தரம் கேட்டுக்கொண்டே தான் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு, கண்ணகியிடம் ஒன்றைக் கொடுத்தான்.