பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

“அந்தக் குள்ளன் இப்படிச் சொல்லித்தான் உங்களை ஏமாற்றியிருக்கிறான். நீங்களும் அவன் பேச்சை நம்பி இந்த வேலையைச் செய்து வந்திருக்கிறீர்கள். இப்படிக் குடைந்தெடுப்பது எடையைக் குறைப்பதற்காக அல்ல. ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு சிலையை மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் அவன் இந்தத் தந்திரம் செய்திருக்கிறான்” என்று மருதாசலம் குள்ளனின் ரகசியத்தை வெளியிட்டான்.

“அப்படியா?” என்று திகைப்போடு தில்லை நாயகம் கூவினார். குள்ளன் திருடனென்று தெரிந்திருந்தால் அவனுக்கு வேலை செய்யத் தில்லைநாயகம் இசைந்திருக்கவே மாட்டார். கொல்லிமலைக்கும் கூடல் பட்டணத்துக்கும் மத்தியிலே வஞ்சியாற்றின் கரையில் ஒரு காட்டுக்குள் இருந்த தச்சுப் பட்டறையில் பல தச்சர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பெரிய பெரிய மரங்களின் அடிப்பாகத்தைக் கொண்டு பொம்மைகள் செய்தார்கள். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் நீளவாட்டில் சரிபாதியாக இருக்குமாறு ரம்பத்தால் அறுத்து, உள்ளேயிருக்கும் மரத்தைக் குடைந்து எடுத்துவிட்டு, இரண்டு பகுதிகளையும் ஒன்றாக வைத்து நன்றாகப் பொருந்துமாறு உள்ளே மறைவாக மறையாணிகளை வைத்துப் பூட்டுவார்கள். இப்படி வேலை செய்து முடிக்கப்பட்ட பொம்மைகளைக் கொல்லிமலைக் குள்ளன் மலை மேல் இருந்த தில்லைநாயகத்திற்கு அனுப்புவான். தில்லை நாயகம் அந்தப் பொம்மைகளுக்குப் பல வகையாக வர்ணங்கள் பூசி அழகுபடுத்துவார். வர்ணம் கொடுத்து உயிருள்ள பெண்கள் போலவே பொம்மைகளைச் செய்வதில் அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். அப்படி அவர் செய்து முடித்த பொம்மைக்குள்தான் கொல்லிமலைக் குள்ளன் யாருக்கும் தெரியாதபடி தானாகவே தனது ரகசியக் குகையில் திருடி வைத்திருக்கும் சிலையை வைத்து மறையாணிகளைத் திருகிப் பூட்டிவிடுவான். மீண்டும் பொம்மையின் அறுபட்ட பாகம் தெரியாதவாறு வர்ணத்தைப் பூசிவிடுவான்.

“இப்படிச் செய்துமுடித்த பொம்மைகளை அமெரிக்காவில் விற்பதற்குக் கப்பலில் எடுத்துச் செல்வான். கொல்லிமலைக்