உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

"சிலர் கேட்கிறார்கள், தி. மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது என்று?

"தி. மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு சென்னைச் செய்திகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். 'தெரியுமா, நண்பர்களே ! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு, மிகவும் பிரமாதம், மிகவும் Progress—மிகவும் முன்னேற்றம்'—என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒருமுறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். 'அப்படியா?' என்றார்கள் எல்லோரும். 'ஏன் தெரியுமா?' என்று அவரே கேள்வியைப் போட்டுக்கொண்டு சொன்னார்: 'எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங்—அண்ணாத்துரையின் பயிற்சி' என்று சொன்னார். 'மந்திரி சுப்பிரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரையுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது' என்று அவர்களே ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது."

இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்டவேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக்கொண்டேன்.