13
பைத்யக்காரத்தனம்—தமிழ் நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.
கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.
இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல, குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால், கூறு கிறார்கள்.
மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே, என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்புவரையில், கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சி பெறுகிறேன்.
முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே, என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.
ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக்கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.
கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.
பாராட்டியவர்களே, கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக்கொள்ளும் மனத்திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெறமுடியாத, ஆனால் விலைமதிக்க முடியாத மிகச்சிறந்த பண்பாகும்.