9
அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.
அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக்கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித்திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில் அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாகவேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?
முடியாதுதான்!
ஏன்?
காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமைபற்றிய மதிப்பீட்டுத்தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.
ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு: பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்தது போல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.
பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக்கேட்டுமிருக்கிறேன்.
உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.