உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பிரிவைத் தவிர வேறு மருந்து இல்லை என்பார், ஆமாம் ! என்று கூறவேண்டும். திடீரென்று, பிரிவினைக்கு உரிமை மட்டும் இருந்தால் போதும் என்பார்—அப்படியா ? அதுவும் சரிதான் ! என்று நாம் பின்பற்ற வேண்டும்.

சமதர்மம் தழைத்தோங்க வேண்டும் என்பார்—சந்தோஷம் என்று கூற வேண்டும். திடீரென்று சமதர்மம் போன்ற தத்துவச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தேவை இல்லை. நமக்குத் தொழிலில் வளர வேண்டும், சமதர்மம் அல்ல !—என்பார் ! ஆஹா ! இது அல்லவா சரியான திட்டம் என்று கூறி அவர் காட்டும் வழி நடக்க வேண்டும். கலைத் தொடர்பு கழகத்துக்கு நல்லது என்பார். நாடகம் ஆடலாம் என்பார் ! ஆகட்டும் என்று ஆட வேண்டும். சே ! கலைத் தொடர்பு இருக்கலாமா ! அது கழகத்தைக் கெடுத்து விடும் என்று கட்டளையிடுவார் ! கீழ்ப்படிய வேண்டும் !!

அண்ணா என்றால் என்னவென்று எண்ணிக் கொண்டீர்கள் ? அவர் ஒரு தனி ஆள் அல்ல ! ஒரு ஸ்தாபனம் என்பார் ! மகிழ வேண்டும். பிறகு அண்ணா என்ன அண்ணா; அண்ணாத்துரை என்று சொல்வோம்—பூஜாமனோபாவம் வேண்டாம்—கூடாது என்பார்— உடனே டேய்! அண்ணாத்துரை! வரையில், அனைவரும் பேச முற்பட வேண்டும், அண்ணா நடையே புதுமை என்பார், பூரிக்க வேண்டும். சே! என்ன ஆபாசமான நடை! பால் வைத்து எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, என்பார்; பயப்பட வேண்டும்; நடையைக் காட்டி, நற்சான்று பெற முயல் வேண்டும்,

சட்டசபையில் தி. மு. க. சாதனைகள் பாரீர் என்பார். மகிழ வேண்டும்; சேச்சே! அக்கறையே—இல்லையே! திறமையே—இல்லையே! என்பார். அழவேண்டும்—பாடம் கேட்க வேண்டும்!