பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

103

அவன் ஏன் வரவில்லை?

அவனை இங்கு யாரேனும் ஏதேனும் பேசினார்களா?

மகனும் மருமகளும் குழந்தைகளும் பெரும் பொங்கலன்று மாலையிலேயே பட்டணம் திரும்பிச் செல்வதைத் தெருவே பார்த்தது.

படித்தவர்களுக்கும், கிராமத்திற்கும் வெகு தொலைவு என்று கணக்குப் போட்டது. அண்ணியின் தோற்றம், குழந்தைகளின் அரசகுமாரக் கோலம் ஆகியவற்றை வைத்து, நாலெழுத்துப் படித்து டவுனுக்குப் போனால்தான் வாழ்வு என்று உறுதி செய்தது.

மனசுக்குள் பூனை பிறாண்டுவது போல் ஒவ்வாமை, காலையில் எழுந்து களேபரமாக இருந்த சமையல்கட்டில் இருக்கும் சாமான்களை ஒழித்துப் பின்பக்கம் போடுகிறாள். முதல் நாள் அடுப்பு வைத்த முன் வாசலில் மீண்டும் சாணம் தெளித்துப் பெருக்குகிறாள். சரோவை எழுப்பிக் கோலம் போடச் சொல்லிவிட்டுப் பின்பக்கமாகவே ஏரிக்கரைப் பக்கம் நடக்கிறாள்.

நெல்லு மிசின் புழுங்கல் உலர்த்தும் முற்றம் விழாக் கொண்டாடுகிறது. பக்கத்தில் பெரிய சாலை. காஞ்சிபுரம் பஸ் போகும் சாலை. வயல்கள்... கரண்ட் ஆபீஸ்... அந்தப் பக்கம் உள்ள குடிசைகளில் ஒன்றுதான் கன்னியப்பனும், ஆயாவும் இருக்கும் இடம். வெளியே முற்றம் பச்சென்று தெளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோலமும் புதிதாகப் போட்டிருகிறது. ஆயா எழுந்திருக்கிறாள்.

“கன்னிப்பா. கன்னிப்பா..!”

உள்ளிருந்து அவன் எட்டிப் பாக்கிறான். சட்டென்று வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு மேல் துண்டுடன் வெளியே வருகிறான்.

“அக்கா நீங்களா?”

“ஆமாம்பா. நீ பொங்கலுக்கு வாராம போயிட்டே?”

அவன் அவளையே நேராகப் பார்க்கவில்லை.