224
கோடுகளும் கோலங்களும்
பழைய கறுத்த உதடுகளும் டம்பப் பேச்சும் திமிரான பார்வையும் போய் விட்டன. உடல் மெலிந்து போயிருக்கிறது. குண்டான கன்னங்களும் ஒட்டிப் போயிருக்கின்றன.மூன் முடி வழுக்கை விழுந்திருக்கிறது என்றாலும் இணக்கமான பரிவு வேண்டிய பார்வை. அவன் மேல் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.
பட்டும் பகட்டும் கர்வமுமாக வந்த அந்த அண்ணியா?
அவளுடைய கர்வமும் பெருமையும் புண்ணில் காய்ந்த பொருக்குகள் போல் உதிர்ந்துவிட்டன. அந்த வயிரங்கள் காதுகளில் இல்லை. கழுத்தில் வெறும் மஞ்சட் சரடுதான் இருக்கிறது. கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்கள்...
வந்திறங்கியதும் வாய் நிறைய “அக்கா சவுக்கியமா? சரோ எப்படி இருக்கே! உங்கள எல்லாம் மறுபடி பார்த்து நல்லபடியா சாமி கும்பிட வேணும்னு ஓரே தாபமாப் போயிடுச்சு” என்று கைகளைப் பற்றிக் கொள்கிறாள். கண்கள் தளும்புகின்றன.
திவ்யாவும் கார்த்திக்கும் “சரோ அக்கா, சரவணன் அன்ணா” என்று ஒட்டிக் கொள்கிறார்கள். இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார்கள்.. அண்ணி அண்ணனை ஏதோ கைப்பிள்ளையைப் பராமரிப்பது போல் பாவிக்கிறாள்.
அவனுக்குப் பல்விளக்க புருசும் பேஸ்ட்டும் எடுத்துக் கொடுப்பதில் இருந்து, இட்டிலியை ஆறவைத்து மிளகாய் பொடி இல்லாமல் தயிர் ஊற்றி வைப்பதும், பாலைக்காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பதுமாகக் கவனிக்கிறாள்.
அவளே அடுப்படிக்கு வந்து புகையடுப்பில் அவனுக்கு தக்காளி பருப்பு ரசம் வைக்கிறாள்.
சில சமயங்களில் செவந்திக்கு எல்லோரும் கண்ணாமூச்சி ஆடுவது போல் தோன்றுகிறது.
“ராசா மாதிரி இருந்த பிள்ளை. உருகி உக்கிப் போயிட்டா. அந்தப் பாவி என்ன சாபமிட்டாளோ...” என்று அம்மா ஊடே கடித்துத் துப்புவது மாறவில்லை.