பக்கம்:கோவூர் கிழார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இப்படி வழங்கியமையால் ‘தேர்வண் மலையன்’ என்ற சிறப்புப் பெயர் அவனுக்கு உண்டாயிற்று.

புலவர்களுக்கு மலையமான் திருமுடிக்காரியிடம் தனியான அன்பு இருந்தது. முடி மன்னர்களைக் காட்டிலும் அவனை மிகுதியாக விரும்பினர். எவ்வளவுதான் அவ்வேந்தர்கள் புலவர்களைப் போற்றிப் பாராட்டினாலும் அவர்கள் உள்ளத்தைத் தொடும்வண்ணம் நெருங்கிப் பழக அவர்களால் முடியாது. காரியோ தாயைப்போல அன்பு செய்தான்; தகப்பனாரைப் போல இடுக்கண் வராமற் காத்தான்; கடவுளைப் போல எல்லாவற்றையும் கொடுத்தான்; நண்பனைப் போலப் பழகினான்; குழந்தையைப் போலப் பழகுவதற்கு மிக மிக எளியவனாக இருந்தான். அவன் வள்ளல்; அறிவாளி; பெருவீரன்; அன்பிலே சிறந்தவன்; கலைஞன்; இப்படி உள்ளவர்கள் கிடைப்பது அருமையிலும் அருமை. அதனால்தான் புலவர்கள் அவனை நாடி வந்தனர்.

இத்தகைய வள்ளல் உலக வாழ்வை நீத்தான். புலவர் உலகமே புலம்பியது. அவனுடைய துணையினால் வெற்றி பெற்ற வேந்தர்கள் தம் கை, ஒடிந்தது போலச் செயலிழந்து நின்றனர். போரில் தோல்வியுற்றவர்கள், ‘இனிமேல் மலையமான் நம்மை எதிர்க்க வரமாட்டான்’ என்று ஆறுதல் பெற்றர்கள். அப்படிப் பெற்றவர்களில் ஒருவன் கிள்ளிவளவன்.

மலையமானுடைய துணை இனி நமக்கு இல்லாமற்போயிற்றே என்று ஏங்கியவர்கள் சிலரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/79&oldid=1111120" இலிருந்து மீள்விக்கப்பட்டது