பக்கம்:கோவூர் கிழார்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கோவூர் கிழார் மேலும் பேசினார். “இவ்வளவும் இருக்கட்டும். அதோ அந்தக் குழந்தைகளைப் பார். சின்னஞ் சிறு குழந்தைகள். பாவம் தங்களுக்கு வரும் ஏதத்தை அவர்கள் உணரவில்லை. புதிய இடத்துக்கு வந்திருப்பதனால் அவர்கள் அழுதார்கள். அவர்கள் உயிரை உண்ண வந்த யானை முன்னே நிற்கிறது. அதைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள். எத்தனை மாசு மறுவற்ற உள்ளம்! தங்களைக் கொல்ல வந்த யானையென்று தெரியுமா? இந்தக் காட்சியைக் கண்டும் உன் மனம் இரங்கவில்லையா? இளந்தளிர் போல இருக்கும் இவர்களிடமா உன் ஆற்றலைக் காட்டுவது? நான் சொல்வது விளங்குகிறதா? நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீயும் கேட்டாய். இனிமேல் உன் விருப்பப்படியே செய்” என்று சொல்லி எழுந்திருக்கப் போனார் புலவர்.

அரசன் தன் கையால் அவரை அமர்ந்திருக்கும்படி குறிப்பித்தான். பேச வாய் வரவில்லை. தான் செய்யப் புகுந்த தவறு அவனுக்கு இப்போது புலனாயிற்று. சிறிது நேரங் கழித்து அவன் பேசினான்: “புலவர் பெருமானே! அந்தக் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றவில்லை. என்னைத்தான் காப்பாற்றினீர்கள். பகையுணர்ச்சியும் செருக்கும் என் கண்ணை மறைக்க இந்தப் பாதகச் செயலைத் செய்யத் துணிந்தேன். தாங்கள் தடுத்து என்ன ஆட்கொண்டீர்கள். உங்கள் அன்பு எனக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும்.”