பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

29


ஒருவர் வாழ்வில் மற்றவர் குறுக்கிட்டுப் பூசல் விளைக்கும் குழப்பநிலையைத் தடுத்து, மக்களுள் ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்பிய குற்றமற்ற இன்பங்களை அடைதற்கு மேற்கொள்ளும் செயல் முறைகளே ‘புறத்தினை' எனப் போற்றப் பெறுவன. இப்புறவொழுக்கங்களை மேற்கொள்ளுதற்குரிய வரம்பு, ‘அரசியல்’ எனப்படும். இவ்வரசியல் வாழ்வில் நன்கு மதிக்கத் தக்க தலைவன், மன்னனாவான். மன்னனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகிய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் எல்லாம் நாட்டு மக்களுக்கும் இன்றியமையாதனவாம்.

நடுவு நிலையில் கின்று நாட்டினையாண்ட அரசன் மக்களால் இறைவனாக மதித்து வழிபடப் பெற்றான். கொடியவர்களால் துன்புறுத்தப்பட்டாரும், வறுமையால் வாட்டமுற்றாரும் ஆகிய பலரும் தம் குறைகளைச் சொல்லி நலம் பெறுதற்கு ஏற்ற முறையில் காட்சிக்கு எளியாகவும் இன்சொல்லுடையராகவும் பண்டைக் தமிழ் வேந்தர் விளங்கினர். அவர்கள் அரசியற்பாதுகாப்புக்காக நாட்டு மக்களிடமிருந்து பெறும் பொருள், விளைவதில் ஆறிலொன்றாகிய நிலவரியேயாகும். அதுவன்றி, நாடு காவலுக்கென மக்கள் தரும் சிறு தொகை ‘புரவு வரி’ என வழங்கப் பெறுவதாகும். வாணிபம் செய்பவர்பாற்பெறும் சுங்கப் பொருளும் பகைவர் தந்த திறைப் பொருளும் அரசாங்கத்திற்குரியனவாம். இப்பொருள்கள் நாட்டின் காவலுக்குரிய படைகளுக்கும், அரண் முதலிய பிற சாதனங்களுக்கும், நீர் நிலை பெருக்கல், பெருவழியமைத்தல், மன்றங்களில் நீதி வழங்கல், இளமரச் சோலை அமைத்தல் முதலிய