பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கண்ணுகளா, வாங்க” என்று கூறிக்கொண்டே அவள் அன்போடு எல்லாரையும் வரவேற்றாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய பொக்கை வாயைக் கண்டு மூவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வந்தது முதற்கொண்டே அந்த வீட்டில் அவர்கள் விருப்பம்போலக் குஷியாக இருக்கலாம் என்று மூவரும் நினைக்கும்படி பாட்டி செய்துவிட்டாள்.“ கண்ணுகளா, முதல்லே பல்தேய்த்துக் கொண்டால் காப்பி தயாராக இருக்கிறது. காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்” என்றாள் பாட்டி.

“கண்ணுகளா, அதோ அந்தக் கிணற்றில் வாளியை விட்டு ஜலம் இழுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் பாட்டி.

“கண்ணுப் பாட்டி, இங்கே குழாய் எல்லாம் இல்லையா” என்று கேட்டான் சுந்தரம்.

“அதென்னடா எனக்குக் கண்ணுப் பாட்டி என்று பெயர் போட்டு விட்டாய்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பாட்டி.

“பாட்டி, நீங்கள் எங்களை அன்போடு கண்ணுகளா, கண்ணுகளா என்று இதற்குள் பலதடவை சொல்லிவிட்டீர்கள். நாங்களும் உங்களைக் கண்ணுப்பாட்டி என்றே அழைக்க ஆசைப்படுகிறோம்” என்றான் சுந்தரம்.

இதைக் கேட்டுப் பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது. “சரி அப்படியே கூப்பிடுங்கள்” என்று அவள் பதில் சொல்லிவிட்டு “குறும்புக்காரப் பயல்” என்று சுந்தரத்தின் கன்னத்தை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள்.

“பாட்டி, உங்களுடைய பெயரை இங்கே வருகின்ற அவசரத்தில் அம்மாவிடம் கேட்க மறந்தே போனோம். இந்தக் கோமாளி வைத்த பெயர் எனக்கும் பிடிக்கிறது” என்றாள் கண்ணகி.

11