பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

101

அன்னியால் அவலப்பட்ட இப்புன்னைத் தொடர்புடைய இன்னொரு பாடலையுங் காண்போம்:

களவியற் செவ்விக்கு ஆட்பட்ட ஒரு தலைமகளின் களவொழுக்கம் செவிலித் தாய்க்குப் புலனாயிற்று போலும். அவளது ஐம்பாலாம் கவினுற்ற கூந்தலைப் பற்றிக் கொண்டு எறிகோல் சிதையுந்துணையும் அவளுடைய சிறுபுறத்தில் புடைத்தாள். அதற்குச் சிறிதும் தளராது நின்ற தலைவி, ஒரு நாள் காதலனுடன் போய் விட்டாள். மகட் போக்கிய செவிலி, மனம் புழுங்கிச் சொல்கின்றாள்:

“சிறிதும் அருளின்றி அன்று எனது அமர்க்கண்ணுடைய அருமந்த மகளை அடித்த எனது கை, அன்னியால் வீழ்த்தப்பட்டு அவலமெய்திய புன்னையைப் போலக் கடுந்துயர் உழப்பதாக” என்று,

ஆள்இல் அத்தத்து அளியள் அவனொடு
... ... ... ... ...
அருஞ்சுரம் இறந்தனள் என்ப பெருஞ்சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னைபோல
நடுநவைப் படீஇயர் மாதோ-களிமயில்
... ... ... ... ... ... ... . . . . . . . .. . . . . . . . .. . .ஐம்பால்
சிறுபல் கூந்தல் போதுபிடித்து அருளாது
எறிகோல் சிதைய நூறவும் சிறுபுறம்
‘எனக்குரித்து’ என்னாள் நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே

(நூற-புடைக்க, அஞ்ஞை-மகள்)
-அகநா. 145 : 6-10 : 22


புன்னைக்கு அவலமிழைத்த அன்னியும், திதியனால் அவலமெய்தினான். இச்செய்தியை நக்கீரரும், அல்ல குறிப்பட்ட தலைவன் கூற்றாக அகத்திணையியலுக்கு ஏற்றிப் பாடியுள்ளார்.

“பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே!
... ... ... ... ... ... ...
மின் நேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே”

-அகநா. 126 : 15-21, 22