பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

புன்கு
பொங்காமியா கிளாப்ரா (pongamia glabra,Vent.)

சங்க நூல்கள் குறிப்பிடும் ‘புன்கு’ என்னும் சிறுமரம் மிக அழகானது. என்றும் தழைத்து இருப்பது. செந்நெல்லின் பொரி போன்ற செந்நிறங் கலந்த வெள்ளிய பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : புன்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : புன்கம்
உலக வழக்குப் பெயர் : புங்க மரம், புன்கம்
தாவரப் பெயர் : பொங்காமியா கிளாப்ரா
(pongamia glabra,Vent.)

புன்கு இலக்கியம்

புன்கு’ மரத்தின் பூக்கள் செந்நிறப் பொரியை ஒத்தவை. மிகச் சிறியவை. தலைவியின் ஊரிலுள்ள நீர்த் துறையில் புன்கு பூத்து, மலர்கள் மணல் மேல் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடம் வேலன் வெறியாட்டு அயரும் பொரி சிந்திய வியன்களம் போன்றுள்ளது. தலைவியை அவ்விடத்திற் கண்ட தலைவன் அவளது முன் கையைப் பற்றிக் கொண்டு தெய்வ மகளிரைச் சுட்டிக் காட்டி, அவளை மணந்து கொள்வதாகச் சூள் உரைக்கின்றான். நெடு நாளாகியும் அவன் வரைந்து கொள்ளவில்லையே என்று தலைவி வருந்துகின்றாள். இதனை அறிந்த தோழி, தலைவனை நோக்கி “நீ கூறிய சூளுரைகள் எம்மைத் துன்புறுத்துவதாயின” என்று கூறுகின்றாள்:

“எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
 நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
 வேலன் புனைந்த வெறி அயர்களந் தொறும்