பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சங்க இலக்கியத்

 செந்நெல் வான் பொரி சிதறியன்ன
 எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
 நேரிறை முன்கை பற்றிச்
 சூர்அர மகளிரொடு உற்ற சூளே”
-குறுந். 53

பூத்த ‘புன்கு’ மலர்கள் சிதறிக் கிடப்பதைப் புலவர்கள் நெற் பொரிக்கு உவமிக்கும் பல சங்கப் பாடல்கள் உள்ளன.

“. . . . . . . . . . . . . . . . . . . . பொரி எனப்
 புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய”
-அகநா. 116 : 5-6

“பொரிஉரு உறழப் புன்கு பூஉதிர”-கலி. 33 : 11

“பொரி சிதறி விட்டன்ன புன்கு”[1]

“புன்குபொரி மலரும் பூந்தண் பொழிலெல்லாம்
 செங்கண் குயில் அகவும்”
[2]

எனினும், புன்கம்பூ முழுவதும் வெண்ணிறங் கொண்டதன்று. இப்பூவின் தலைப் பகுதியில் சிறிய செந்நிறம் காணப்படும். பிற நெல்லின் பொரி போலாது செந்நெற் பொரியில்தான் இச்செந்நிறம் கூறப்படுகின்றது. இதனை மேற்குறித்த குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. இதற்கு விளக்கம் தருகின்றார் திருத்தக்கதேவர்.

“செந்தலையை வெண்களைய புன்கம் பொரியணிந்தவே”[3]

புன்கு பூத்த போது இச்சிறு மரம் மிக அழகாகத் தோன்றும். இதில் செங்கண் குயில் கூடி அகவும்; இதன் தளிர்கள் பளபளப்பானவை, மஞ்சள் கலந்த செந்நிறமானவை; அழலை ஒத்தவை. இவ்விளந் தளிர்களை மகளிர் தமது மார்பகத்தில் அப்பிக் கொள்வர். தமிழ் இலக்கியம் இதனைத் ‘திமிர்தல்’ என்று கூறும்.

“எழில்தகை இளமுலை பொலியப்
 பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே”
-ஐங்: 347 : 2-3

“பொரிப்பூம் புன்கின் அழற்றகை ஒண்முறி
 சுணங்கு அணிஇளமுலை அணங்கு கொளத்திமிரி”

-நற். 9 : 5-8


 

  1. திணைமா. நூ : 64 : 4
  2. திணை. மொ : 14 : 1-2
  3. சீ. சிந் : 1649 :4