பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

249

“செவ்வரைச் செயலை”-திருமுரு. 206

“ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை
 ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்புஎன”
-அகநா. 68 : 5-6

“. . . . . . . . . . . . . . . . . . . . அந்தளிச் செயலைத்
 தாழ்வில் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
 ஊசல்மாறிய மருங்கும்”
-அகநா. 38 : 6-8

இம்மரம் இப்போது பங்களூர் ‘லால்பாக்’ தாவரப் பூங்காவில் அருமையாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடிமரம் செம்மை கலந்த பழுப்பு நிறமானது. இதன் இலை, பல்லலகுடை கூட்டிலையாகும். சிற்றிலைகள், ஆறு முதல் பன்னிரண்டு வரையில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பசிய சிற்றிலையும், குத்துவாள் வடிவினதாய் 7-18 செ. மீ. நீளமானது. தோல் போல் சற்றுத் தடித்துமிருக்கும்.

இதன் தளிர் அழகிய சிவப்பு நிறமானது. இதனைச் செந்நிறம் ஊட்டப்பட்ட ஒளி வீசும் தளிர் எனவும், பவளச் சிவப்பானது எனவும், இத்தளிரை ஆடவரும், மகளிரும் காதில் செருகிக் கொள்வர் எனவும், இதனை மந்தி உணவாகக் கொள்ளும் எனவும் கூறுவர்.

“ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை”-அகநா. 68:5

“வண்காது நிறைத்த பிண்டி ஒண்தளிர்
 நுண்பூண் ஆகம் திளைப்ப”
-திருமுரு. 31-32

“அழல் ஏர் செயலை ஆம்தழை”- அகநா. 188 : 11

“சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள்”
-பரிபா. 11 : 95

“அத்தச் செயலைத் துப்புஉறழ் தண்தளிர்
 புன்தலை மந்தி வன்பறழ் ஆரும்”
-ஐங். 273 : 1-2

(அத்தம்-சிவந்த)

பிண்டியின் மலர்கள் மிகச் சிவந்த நிறமுடையவை. இவை மரக்கிளைகளில் எல்லாம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். இவ்வுண்மையைப் புலவர்கள் அங்ஙனமே கூறியுள்ளனர். இதன் இணரிலுள்ள மலர்களில் சுரும்பு மொய்க்கும் என்றும் கூறுவர்.