பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆவிரை
காசியா ஆரிகுலேட்டா (Cassia auriculata, Linn.)

கபிலர் ‘விரிமலர் ஆவிரை வேரல் சூரல்’ (குறிஞ். 71) என்று ஆவிரையைக் குறிப்பிடுவர். ‘ஆவிரை’ என்பதற்கு, நச்சினார்க்கினியர் ‘ஆவிரம்பூ’ என்று பொருள் கண்டார். இதனை ‘ஆவிரம்’ எனவும், ‘ஆவாரை’ எனவும் கூறுவர். இது ஒரு புதர்ச் செடி. ஓரிரு ஆண்டுகள் வாழும். மலர்கள் மஞ்சள் நிறமானவை. புலவர்கள் இம்மலர் பொன்னை ஒத்த மஞசள் நிறமானது என்பர்.

சங்க இலக்கியப் பெயர் : ஆவிரை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஆவிரம்
பிற்கால இலக்கியப் பெயர் : ஆவாரை
உலக வழக்குப் பெயர் : ஆவாரை, ஆவாரம்பூ,, ஆவாரம்
தாவரப் பெயர் : காசியா ஆரிகுலேட்டா
(Cassia auriculata, Linn.)

ஆவிரை இலக்கியம்
கபிலர் “விரிமலர் ஆவிரை வேரல் சூரல்” (குறிஞ், 71) என்று கூறிய பகுதியில் உள்ள ஆவிரை என்பதற்கு ஆவிரம்பூ என்று நச்சினார்க்கினியர் பொருள் கண்டார். தொல்காப்பியத்தில் ‘ஆவிரை’ என்னும் சொல் குறிக்கப்பட்டு, புணர்ச்சி விதி பெற்து உள்ளது. ஆவிரை பூ என்புழி, வல்லின முதல் மொழியோடு புணரும் போது ஆவிரையின் இறுதி ஐ கெட்டு ‘அம்’ சாரியை பெற்று ஆவிரம்பூ என்றாகும். இது கலித்தொகையில் ஆவிரம் என்றும், பிற்காலத்தில் ஆவாரை என்றும் பேசப்படும். பிங்கலம் [1] இதற்குப் பகரி என்றதொரு பெயரைப் பகரும்.


  1. பிங். நி. 2862