பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

சங்க இலக்கியத்


“பொன்வீக் கொன்றை”-ஐங். 246 : 8

“பொன்னென மலர்ந்த கொன்றை”-ஐங். 420 : 1

“சுடுபொன் அன்ன கொன்றை சூடி”-ஐங். 432 : 2-3

“நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன”
-பரிபா. 14 : 10


என்றெல்லாம் புலவர் பெருமக்கள் புகழ்ந்துரைப்பர். அதற்குக் காரணம். கொன்றை மலரின் இதழ்கள் பொற்காசு போன்று வண்ணமும், வடிவமும் உடைமையின் எனலாம். மேலும், பேயனார் பொன் நிறைத்து வைத்த பேழை ஒன்றைக் காண்கின்றார். “கவலைக் கிழங்கு தோண்டி எடுத்ததால், ஓர் அகன்ற குழி உண்டாகிறது. அதில் கொன்றையின் பூக்கள் விழுந்து நிறைந்திருக்கின்றன. இத்தோற்றம் பொன்னைப் பெய்து வைத்த பேழையைத் திறந்து வைத்தது போலத் தோன்றுகிறது” என்கிறார்.

“கவலைக் கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி
 கொன்றை ஒள்வீ தாஅய், செல்வர்
 பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன”
-குறுந். 233 : 1-3

(மூய்-மூடி)

கொன்றை மலரின் பொன்னிறப் பொலிவும், புதுமலர் மெருகும், கொய்து சூடிக் கொள்ள அழைக்கும். முல்லை நிலத்துக் கோவலர் இதனைச் சூடி அணிந்து மகிழ்வர். இடைக்குலத்து மகளிர் குழலில் சூடிக் கொள்வர் இப்பொன் நேர் புது மலர் நறு நாற்றமும் உடைத்தாகலின், இதனை,

“பொன்செய் புனை இழை கட்டிய மகளிர்
 கதுப்பில் தோன்றும் பூதுப்பூங் கொன்றை ”

-குறு. 21 : 2-3


என்றார் ஓதலாந்தையார்.

ஏறுதழுவலின் போது கொன்றைப் பூச்சூடிய ஆயர் மகள் அடையாளங் கூறப்படுகிறாள்.

“வென்றி மழவிடை ஊர்ந்தார்க் குரியள்இக்
 கொன்றையம் பூங்குழலாள்”
[1]

உழவர் முதலில் பொன் ஏர் பூட்டு ஞான்று கொன்றை மலரைச் குடிக் கொள்வர் எனப் பதிற்றுப்பத்து கூறும் .

 

  1. சிலப். 17 : 11 : 1-2