பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கரந்தை
ஸ்பெராந்தஸ் இன்டிகஸ் (Sphaeranthus indicus, Linn.)

சங்க நூல்களில் காணப்படும் இப்போர் மலருக்குக் ‘கரந்தை’ என்று பெயர். ஆநிரைகளைக் கவர்ந்தவர்களிடம் அவற்றை மீட்க முனைந்தெழும் போர் வீரர்கள், இதனைச் சூடிக் கொண்டு போருக்கு எழுவர். இது ஒரு சிறு செடி. செந்நீலம், சிவப்பு, நீலம், இளஞ் சிவப்பான சிறு முட்டை வடிவான மஞ்சரித் தொகுப்பான மலர்களைச் செடியின் முடியில் கொண்ட சிறு செடியாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
உலக வழக்குப் பெயர் : சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, கொட்டைக்கரந்தை
தாவரப் பெயர் : ஸ்பெராந்தஸ் இன்டிகஸ்
(Sphaeranthus indicus, Linn.)

கரந்தை இலக்கியம்

கரந்தையும் ஒரு போர் மலராகும். ஆநிரைகளைப் பறி கொடுத்தோர் அவற்றை மீட்பதற்குப் போர் தொடுப்பர். அதற்கு அடையாளமாகக் கரந்தை மலரைப் போர் மரபு அறிந்தவர் வீரரது தலையிற் சூட்டுவர் என்று புறநானூறு கூறும்.

“நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
 விரகறி யாளர் மரபிற் சூட்ட
-புறநா. 261 : 13-14

கரந்தையைச் சூடுதல் ஆநிரைகளை மீட்பதற்கு மட்டுமன்றி. யானை முதலியன கவரப்படின் அவற்றை மீட்கவும் கரந்தையைக் கண்ணியாகவும் மாலையாகவும் சூடிக் கொள்வதுண்டு.

கரந்தைச் செடி நெல் அறுத்த வயல்களில் முளைத்து நிறைந்து வளரும்.