பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

மஞ்சரி : மும்முறை கிளைத்த நுனி வளராப் பூந்துணர் கொத்துக் கொத்தாகக் கிளை நுனியில் இருக்கும். இதனைக் ‘காரிம் போஸ் சைம்’ என்பர். பூவடிச் செதில் தடித்து, இலை போன்றது. மலரடிச் சிறு செதில்கள் 2.
மலர் : செக்கச் சிவந்த நிறம். முகை முள் போன்றது. கூரியது. நீளமானது.
புல்லி வட்டம் : புறவிதழ்கள் இணைந்த முட்டை வடிவமான குழல் போன்றிருக்கும். விளிம்பு 4 பிளப்புகளை உடையது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, அடியில் நீண்ட குழல் வடிவாக இருக்கும். மலர் நுனியில் 4 மடல்கள் விரிந்திருக்கும். இவை முகையில் முறுக்கி விட்டது போன்றிருக்கும். மலர்ந்த இம்மலர்க் கொத்து மிக அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 4 தாதிழைகள் வாயவிழ்ந்த மலரின் வாயில் காணப்படும். தாதிழை மிகக் குட்டையானது. தாதுப்பைகள் மெல்லியவை. அடியில் இரு பிளவாகவும், நுனி கூரியதாகவும் இருக்கும்.
சூலக வட்டம் : இரு செல்லுடையது. ஒரு தொங்கு சூல் சூலக அறையில் காணப்படும். சூல்தண்டு தடித்தது. சூல்முடி இரு பிளவானது. சதைக்கனி நீண்ட ‘பெர்ரி’ எனப்படும்.
விதை : முட்டை வடிவானது. சூலறையில் தொங்கிக் கொண்டிருக்கும். விதையுறை மிக மெல்லியது. வித்திலைகள் சிறியவை. இலை போன்றிருக்கும்.

வெட்சி ஓர் அழகுச் செடியாகத் தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என டி. எஸ். இராகவன், அரங்கசாமி (1941) கணக்கிட்டனர்.