பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

சங்க இலக்கியத்

ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டில் அதிரல் என்பதற்குப் ‘புனலிப்பூ’ என்றார். அங்ஙனமே, புறநானூற்றுப் பழைய உரைகாரரும் இதனைப் புனலிக்கொடி, புனலி என்றனர். இம்மலரில் நீர்ப் பிடிப்பு இருந்ததாக நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது; ஈங்கை முகையுடன், அதிரல் பூவும் மணல் மேட்டில் உதிர்ந்து கிடந்தது. ஒரு மான் அவற்றின் மேல் அடி வைத்தது. அப்பொழுது இரண்டிலிருந்தும் நீர் குமிழியிட்டு வெளிப்பட்டது. இக்காட்சி வெள்ளியை உருக்கும் மூகையைக் கவிழ்த்தால், உருகிய வெள்ளி வெளி வந்தது போல இருந்ததாம். இப்பாடல் கூதிர்க் காலம் வந்ததைக் குறிப்பதாகும். அதனால், இவற்றினின்றும் வெளிப்பட்ட நீர், மழை நீராகாது. மலரின் நீர்ப் பிடிப்பாக இருக்கலாம். இது கொண்டு ஒருக்கால், இதனை புனலிப் பூவெனக் கருதினரோ என்று எண்ண இடமுள்ளது.

இப்பூ ஆடவரால் கண்ணியாகவும், மகளிரால் பிற மலர்களுடன் விரவிக் கட்டிய கோதையாகவும் சூடப்படும். விரும்பிச் சூடப்படும் மலராதலின், இது விற்பனைப் பூவாகவும் இருந்தது. பூ விற்போர் அகன்ற வட்டிலில், அதிரல் பூக்களை நிறைத்து, மேலும், மேலும் வைக்க இடமில்லாமல் ஏனையவற்றை விட்டொழித்தனர் என்று காவல் முல்லைப்பூதனார் கூறுவர் (அகநா. 391 : 2-4).

இப்பூவைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள் காடு, கான், சுரம் என்னும் சொற்களையும், அவ்விடங்களில் அமையும் பிற கருப் பொருள்களையும் நோக்கும் போது, இம்மலர், பாலை நிலத்தையோ, முல்லை நிலத்தையோ குறிக்கக் கூடுமாயினும், அகநானூற்றில் இம்மலர் பாலையைக் குறிக்கும் பாக்களில் கூறப்படுகின்றது.

அதிரல் (காட்டு மல்லிகை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)