பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குடசம்–வெட்பாலை
ஹோலரீனா ஆன்டிடிசென்ட்ரிகா
(Holarrhena antidysentrica,Wall.)

‘வான்பூங்குடசம்’ (குறிஞ். 67) என்னும் கபிலரின் சொற்றொடருக்கு ‘வெள்ளிய பூவினை உடைய வெட்பாலைப்பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும் ‘குடசம்’ என்பது ‘வெட்பாலை’ என்று அடியார்க்கு நல்லார் கூறுதலின் நச்சினார்க்கினியர் உரை வலியுறும்.

சங்க இலக்கியப் பெயர் : குடசம்
பிற்கால இலக்கியப் பெயர் : வெட்பாலை
உலக வழக்குப் பெயர் : கிரிமல்லிகை, வெட்பாலை, குடசப்பாலை, குளப்பாலை
தாவரப் பெயர் : ஹோலரீனா ஆன்டிடிசென்ட்ரிகா
(Holarrhena antidysentrica,Wall.)

குடசம்–வெட்பாலை இலக்கியம்

‘வடவனம் வாகை வான்பூங் குடசம்’ (குறிஞ். 67) என்றார் குறிஞ்சிக் கபிலர். இதற்கு ‘வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டார். சிலப்பதிகாரத்தில்[1] புறஞ்சேரியிறுத்த காதையில் ‘குடசம்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் வெட்பாலை என்றார். எனினும் ஊர்காண் காதையில் வரும் ‘குடசம்’ என்பதற்கு அவர் ‘செங்குடசம் பூ’ என்று உரை கூறுவர். ஆதலின் குடசத்தில் செம்மை வகை உண்டென அறியலாம். மேலும் ‘குரற்றலைக் கூந்தல் குடசம் பொருந்தி’[2] என்றமையால் இப்பூவை மதுரை மகளிர் குடுவர் என்பது அறியப்படும்.


  1. சிலப். 18:157
  2. சிலப். 14: 87