பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வள்ளை
ஐபோமியா ரெப்டன்ஸ் (Ipomoea reptans,Poir.)

வள்ளை இலக்கியம்

‘வள்ளை’ என்பது தண்ணிரில் மிக நீண்டு வளரும் கொடி. இக்கொடியின் தண்டில் சிறு துளை இருக்கும். இதனைப் பரணர்,

“அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
-அகநா. 376 : 14


என்று பாடுகின்றார். இதன் இலைகளைச் சமைத்துண்ண மகளிர் கொய்வர்.

“வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”-பதிற். 29 : 2

இக்கொடி நீர் வயலிலும் வளரும் என்பதைப் புறநானூறு கூறும். (புற. 399 : 6).

இக்கொடியில் ஊதா நிறமான மலர்கள் பூக்கும். வள்ளையின் கொடி வளைந்து (புறநா. 16 : 13) நெளிந்து, நீண்டு வளருமாதலின், (மது. கா. 255) இதனையே மகளிர் காதுக்கு உவமையாகக் கூறுகின்றது. பிற்கால இலக்கியம்.[1]

நிகண்டுகள் இதற்குத் ‘தாளிகம்’ என்ற ஒரு பெயரைச் சூட்டுகின்றன.


  1. “வள்ளைத்தாள் போல் வடிகாது இலைகாண்”
    -மணிமே. 25 : 5