பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

647

“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
 சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
 புணர்ப் பொறை தாங்கிய”
-பெரும்பா. 77-79

மேலே எடுத்துக் காட்டிய பெரும்பாணாற்றுப்படையின் ஒரு சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் உரை நுனித்தறிந்து மகிழ்தற்பாலது. அந்த நல்ல சொற்றொடர்

“சிறுசுளைப் பெரும்பழம்” என்பது.

பலாப்பழத்தைத் தாவர இயல். ரிசெப்டகிள் (Receptacle) என்று விளக்கும். ரிசெப்டகிள் என்பதற்குக் ‘கோளி’ என்ற சொல் மிகப் பொருத்தமானதாகும். பலாப் பிஞ்சின் (துணர்) பெண் பூக்கள் மகரந்தச் சேர்க்கையுற்ற பின், பலாச் சுளைகளாகி விடும். இவற்றைச் சதைப் பற்றுள்ள பழவுறை மூடிக் கொள்ளும். பலாச் சுளைகள் பழத்தின் இயல்புக்கேற்ப மலிந்திருக்கும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப் படையில், பலாவின் பெரிய பழத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால், அவர் ‘சிறுகளை’ என்று, பழத்தை நோக்கிச் சிறு சுளை என்றார் போலும். இதற்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் தமது கூர்த்த மதியினைப் புலப்படுத்தி, ‘சிறுமை எண்ணின் மேற்று’ என்னுமாப் போல, ‘சிலவாகிய’ சுளையினை உடைய பெரிய பழம் என்றார். இதனால் சிறிய எண்ணையுடைய பெரிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப்பழம் என்பதாயிற்று. மேலும் இவர், ‘நல்ல பழம் சுளை மிக இராது என்றார்’ என்ற குறிப்பும் எழுதியுள்ளார். ஆகவே ‘சிறு’ என்ற சொல்லுக்குப் ‘பெரிய’ என்னும் பொருள்படும் படியாக இவர் உரை கூறிய திறம் போற்றுதற்குரியது.

பலாப்பழம் முதிர்ந்தவுடன், மலர் மணம் போல நறுமணம் பரப்பும். பலாச்சுளைகள் மிக இனியவை. நன்கு முதிர்ந்த பழத்திலிருந்து தேன் வடியும். இதன் சுளைகளை மக்களும், குரங்குகளும், பறவைகளும் விரும்பியுண்ணுப. பலாச் சுளையை விருந்தினர்க்களிப்பர் என்று மதுரைக்காஞ்சி கூறும்.

“கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி” -குறுந். 90
“வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்” -மலைபடு. 337
“தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
 விளை அம்பின் இளையரொடு மாந்தி”
-அகநா. 182 : 3-4