பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சடுகுடு ஆட்டம்


அதே விளையாட்டு சில சமயங்களில் விபரீதமாகப் போய் விடுவதும் உண்டு. அது ஆட்டக்காரர்களுக்கிடையே நிகழ்கின்ற அலங்கோல உணர்வுகளின் ஆரோகணச் சக்தியினால்தான் என்பதையும் எல்லோரும் உணர்வார்கள். ஆகவே, ‘விளையாட்டினைப் பாதுகாப்புடன்தான் விளையாட வேண்டும். விளையாட்டு என்பது ஒருநாள் கூத்து அல்ல. வாழும் காலம் எல்லாம் தொடர்ந்து வரும் துணையாகும்’ என்பதுதான் நல்ல ஆட்டக்காரர்கள் பின்பற்றக்கூடிய நயமான வழிமுறையாகும்.

கைப்பந்தாட்டம், வளையப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், எறிப் பந்தாட்டம், டென்னிஸ் போன்ற ஆட்டங்களில் எதிராட்டக்காரர்கள் வலைக்கு இருபுறமும் இருந்து விளையாடுவதால், ஒருவருக்கொருவர் உடல் மோதல் ஏற்பட வழி இல்லாமல் போய்விடும்.

கால் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், வலைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்களில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் இடித்துக்கொள்ள, சில நேரங்களில் வலிமையுடன் மோதிக் கொள்ளவும் நேரிடுகிறது.

கோகோ போன்ற ஆட்டத்தில், எதிராட்டக்காரரைத் தொட்டுத்தான் வெளியேற்ற வேண்டும் என்ற விதியே அடிப்படை விதியாக இருந்தாலும், அதில் அவ்வளவு வேகம் இல்லை. மோதல் சாடல் என்று எதுவும் இல்லை. அப்படி அடித்து ஆடினால், அவர் தொடப்படவில்லை என்று நடுவர் அறிவிக்கின்ற அளவில் விதிகள் தடுத்தாளுகின்றன.