பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

107


ஆனால், சடுகுடு ஆட்டத்தில் அப்படியல்ல. இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஆட்டக்காரர்களும் ஆளைப்பிடித்துக் கொண்டு அழுத்தவும், பிடி பட்டவர்கள் திமிறிக் கொண்டு விடுபடவும் என்ற முரட்டுத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு ஆடுவதால், அடிக்கடி நேரக்கூடிய அபாயக்கோடுகள் அதிகம் உண்டு.

ஆகவே, பத்திரமான ஆட்டமாக அமைய வேண்டுமே என்று ஆட்டத்தில் அக்கறை கொண்ட அனைவருமே துடித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை. எனவே, பத்திரமான முறைகள் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது சடுகுடு ஆட்டத்தில் மிகமிக முக்கியம் என்பதை ஆட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பத்திரமான ஆடுகளம்

ஆடுவதற்கு முதல் தேவை ஆடுகளம் என்பதை நாம் அறிவோம். ஆதிகாலந் தொட்டு, மணற் பரப்பில்தான் இந்த ஆட்டம் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரை மணற்பகுதியில், மணற்பரப்புள்ள வீதிகளில் எல்லாம் விளையாடிய நாட்கள் வேகமாக மறைந்துகொண்டு, மென்தரைக்கு வழிவிட்டு ஒதுங்கிப் போயின.

புதிய ஆட்டமுறை புகுத்தப்பட்ட பின்னர், மணற்பரப்பு ஆடுகளத்திற்கு அவசியம் இல்லை என்று ஆட்ட வல்லுநர்கள் அபிப்ராயம் தெரிவித்துவிட்டனர்.

மணல் இல்லாத, மென்தரையில் (Soft Ground)தான் ஆடுகளம் அமைய வேண்டும் என்ற விதியமைத்தனர்.