பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



104 இக்காலத்தில் கிடைத்துள்ளவை ஒன்பது திருப்பாடல்களேயாகும். இவற்றுள் திருக்கோயிலின் பெயரும் இறைவன் திருநாமமும் கூறப்பட்டுள்ளனவேயன்றி, ஒன்றிலேனும் ஊரின் பெயர் காணப்பட வில்லை . திருஞானசம்பந்த சுவாமிகளும் தம் க்ஷேத்திரக் கோவையில் 'மாட்டூர் மடப்பாச்சிலாச்சிராமம் முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி' என்ற அடியில் முண்டீச்சரம் என்னுந் திருக்கோயிற் பெயரைக் குறித்துள்ளனரே யன்றி, இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரைக் கூறவில்லை . இனி, கல்வெட்டுக்களின் துணைகொண்டுதான் ஊரின் பழைய பெயர் யாதெனக் காண்டல் வேண்டும். கிராமம் என்னும் ஊரிலுள்ள இத்திருக்கோயிலில் பத்தொன்பது கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள், மூன்று கல்வெட்டுக்கள் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இரண்டு கல்வெட்டுக்கள் விசயநகரவேந்தர் ஆட்சிக்காலத்திலும் வரையப்பெற்றவை. எஞ்சிய கல்வெட்டுக்கள் எல்லாம் சோழ மன்னர்களின் காலத்தனவாகும். இக்கல்வெட்டுக்களுள் மிக்க பழமை வாய்ந்தவை முதற்பராந்தக சோழன்காலத்துக் கல்வெட்டுக்களேயாம். இவற்றுள் ஒன்று, பல வரலாற்றுண்மைகளை நன்கு விளக்குவதாக உள்ளது. இக்கல்வெட்டின் முற்பகுதி, மூன்று வடமொழிச் சுலோகங்களிலும் பிற்பகுதி தமிழ்மொழியிலும் அமைந்துள்ளன. முற்பகுதி, கேரளதேயத்தில் புத்தூரில் பிறந்தவனும் இராசாதித்தனுடைய படைத்தலைவனுமாகிய வெள்ளங்குமரன் என்பான் பெண்ணை யாற்றங்கரையிலுள்ள மௌலி கிராமத்தில் மந்தரமலை போன்ற கற்றளி ஒன்று மாதேவர்க்கு அமைத்தனன் என்று உணர்த்துகின்றது. தமிழ்மொழியிலுள்ள கல்வெட்டுப் பகுதியை அடியிற் காண்க; (1) 'ஸ்வஸ்திஸ்ரீ கலியுக வர்ஷம் நாலாயிரத்து நாற்ப (2)த்து நாலு மதுரைகொண்ட கோப்பரகேசரிவன்மற் (3) கு யாண்டு ஆவது கலியுக..ன்றா நாள் (4) பதினான்கு நூறாயிரத்து எழுபத் தேழாயிரத்து (5) முப்பத்து ஏழுஆக திருமுடியூர் ஆற்றுத்தளி (6) பெருமானடிகள் உடைய...ம் திரு (7) க் கற்றளியாக அமைப்பித்து இவ்வாட்டைம் (8) கர நாயற்றுச் சனிக்கிழமை பெற்ற இரேவதி ஞான் (9) று கும்பதாரையால் (10) மூன்றுச்சி பதினாறு (11) அடியில் ஸ்ரீ ஆற்றுத்தளிப் (12) பெருமானடிகளை (13) த் திருக்கற்றளியினுள் (14) ளே புக எழுந்தருளுவித்து பிரதிஷ்டை செய்வி (15) த்தார் சோழர்கள் மூலப்(16) ருத்யர் ஸ்ரீ பராந்தக தேவரான (17) ஸ்ரீ வீர சோழப் பெருமானடிகள் (18) மகனார் ராஜாதித்ததேவர் பெரும் (19) படை நாயகர் மலைநாட்டு நந் (20) திக்கரைப்புத்தூர் வெள்ளங் (21) குமரன் இது பன்மாகேஸ்வர (22) ரக்ஷை ரக்ஷிப்பார் ஸ்ரீ பாதம்தலை (23) மேலன' Archaeological Survey of India, Annual Report 1905-06, 182 - 3.