பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மேற்குறித்துள்ள அரசர்பெருந்தகைகளுள் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகாலனது தந்தையாவன்: கரிகாலன் 12000 சிங்களவர்களைச் சிறைபிடித்துக் கொணர்ந்து காவிரியினிருமருங் குங்கரை யெடுப்பித்துத் தங்கள் நாட்டைப் புனனாடெனவும், தங்களை வளவரெனவும் யாவருஞ் சிறப்பித்தோதும்வண்ணம் சோணாட்டை வளமுறச் சீர்படுத்திய செம்பியரேறென்ப. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் என்போர் ஒரேகாலத்துச் சோணாட்டில் விளங்கியோ ரென்பது இவர்கள் தாயபாகத்தின் பொருட்டு ஆமூர், உறையூர் முதலிய இடங்களில் முற்றுகையிட்டுப் போர்புரிந்த செய்தியைக் குறிக்கும் புறப்பாடல்களால் நன்குவிளங்கும். கிள்ளிவளவன் உறையூரிலிருந்து சோணாட்டையாட்சிபுரிந்தவன்; இவனுக்குவிரோதிகளாய்ச் சோழர்கு டியிற்றோன்றியோ ரொன்பதின்மர் உண்ணாடுகளிற்கலகஞ் செய்து வந்தனர்: உறையூர்க்குத் தென்புறத்துள்ள நேரிவாயிலில், சேரன் செங்குட்டுவன் இவர்களைப் போரில் வென்று மைத்துனனாகிய கிள்ளிவளவனது ஆட்சியைச் சோணாட்டில் நன்கு நிலைநாட்டினா னென்பது பதிற்றுப்பத்து 5-ம்பத்தின் பதிகத்தானும் சிலப்பதிகாரத்தானும் அறியப்படுகிறது. இதனால், இக்குடியினர்பலர் இந்நாடுகளில் யாண்டும் வசித்து வந்தனரெனத் தெரிகிறது. இவர்கள் உண்ணாடுகளிலும், சோழமன்னர்களால் ஜெயிக்கப்பெற்ற புறநாடுகளிலும் சிற்றரசர்களாகவும் தண்டத்தலைவராகவும் மண்டிலமாக்களாகவும் கோட்டம், கூறு, நாடு முதலியவற்றின் அதிகாரிகளாகவும் இருந்துவந்தனராதல் வேண்டும். கோப்பெருஞ்சோழனென்போன், தன்மேற்பகைகொண்ட தன்மக்களிரு வருடன் போர்க்கெழுந்தஞான்று புல்லாற்றூர் எயிற்றியனாரென்னும் புலவர்பெருமானாற் சமாதனஞ்செய்யப்பட்டுத் தன்னரசையவர்கட் களித்துத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தனனென்பது புறப்பாடல்களால் அறியப்படுகின்றது. சோழன் செங்கணான், அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவராக விளங்கிய வளவர்பெருமான்.