பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



6 2. சோழன் கரிகாலன் 55 கி.பி. - 95 கி.பி. பண்டைக்காலங்களிற் சோழநாட்டை மிக்க நீதியுடனும் சிறப்புடனும் ஆண்டுவந்த சோழ அரசர்களுட் சிலர்சரிதத்தை, யான் அறிந்தவரை நம் நாட்டார்க்குத் தெரிவிப்பது என்கடமையாதலின், ஈண்டுச் சோழன் கரிகாலன் சரிதத்தை ஒருவாறு சுருக்கி எழுதப்புகுந்தேன். இவ்வரசனை, சோழன்கரிகாலனென்றும், சோழன்கரிகால் வளவனென்றும், சோழன்கரிகாற்பெருவளத்தானென்றும், பழைய நூல்கள் கூறுகின்றன. ஆயினும், சோழவம்ச பரம்பரையிற் கரிகாலன் காலத்திற்குப் பின்னர், அவன் பெயரைத்தரித்த அரசர் பலரிருந்தன ரென்று தெரியவருகிறதினால், இவனைக் கரிகாலன் முதலாவான் என்றேவழங்கல் சாலப்பொருந்தும். உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னியின் அருமைப்புத்திரனாகிய இம்மன்னர் பெருமான் ஆட்சிபுரிந்தகாலம் கி.பி. 55 முதல் கி.பி. 95 வரையிலுமென்று '1800 ஆண்டுகட்குமுந்திய தமிழர்' என்னும் நூலுடையார் கூறுகின்றனர். இதனை, மற்றைய பழங்சரித்திர வாராய்ச்சிவல்லாரும் அங்கீகரித்திருக்கின்றனர். இவ்வரசன் சிறுவனாயிருக்கும்போது காலில் நெருப்புப் பற்றிக் கால் வெந்து போயிற்று. இக்காரணம்பற்றியே இவன் கரிகாலனென்று வழங்கப்படுகிறான் போலும். இவன்காலில் நெருப்புப்பற்றிய விஷயம், "முச்சக்கரமுமளப்பதற்கு நீட்டியகா லிச்சக்கரமேயளந்ததாற் - செய்ச்செ யரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்ப்புனனீர் நாடன் கரிகாலன் கானெருப்புற்று" என்ற பழைய செய்யுளால் அறியப்படுகிறது. இவன் பால்யத்திலேயே சிங்காதனம் ஏறும்படி நேர்ந்தது. இவன் பட்டத்திற்குவந்தவுடனே ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு நியாய ஸ்தலத்திற்குத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வந்த இருமுதியோர்கள் தாம் நெடுந்தூரத்தில்வரும்போதே நியாயசபையில் ஓர் இளைஞனிருப்பதாக அறிந்து அவ்விளைஞனால் தம் வழக்கை நியாயமாய்த் தீர்க்கமுடியா தென்று சந்தேகித்தார்கள். அவர்கள் சந்தேகித்த விஷயத்தை ஒற்றர்கள் மூலமாக அல்லது வேறு எவ்விதமாகவோ அறிந்துகொண்ட கரிகாலன், அரண்மனைக்குள் விரைந்து சென்று கிழவனைப்போல் மாறுவேடம் பூண்டுகொண்டு சிங்காதனத்தமர்ந்திருந்தனன். பின்னர், நியாயசபையை நோக்கி வந்த விருவரும் சிங்காதனத்தில் வயது முதிர்ந்தவரசனே இருக்கிறானென்றுணர்ந்து தங்கள் வழக்கைத் தெரிவித்துக்