பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



180 திருஞானசம்பந்த சுவாமிகளுக்குச் சிவபெருமான் ஆயிரம் பொன் அடங்கிய பொற்கிழி யொன்றை அளித்தருளிய தலமாகும். இங்குள்ள ஒரு கல்வெட்டு * இவ்வாலயத்தின் பெயரே திருவாவடுதுறை என்றுணர்த்துவதோடு இஃது அமைந்துள்ள ஊர் சாத்தனூர் என்றும் கூறுகின்றது. எனவே, சாத்தனூர் என்னும் திருப்பதியிலுள்ள சிவாலயமே திருவாவடுதுறை என்னும் பெயருடன் முற்காலத்தில் நிலவிற்று என்பது ஒருதலை. இதனை வலியுறுத்தும் மற்றொரு சான்று சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பாவில் திருவாவடுதுறைப் பதிகத்தில் உளது. அஃது, ஒழிவொன்றிலாவுண்மை வண்ணமும் உலப்பிலளு றின்ப வெள்ளமு மொழிவொன்றிலாப் பொன்னித்தீர்த்தமு முனிகோடி கோடியாமூர்த்தியும் அழிவொன்றிலாச் செல்வச்சாந்தையூர் அணியாவடுதுறையாடினாள் இழிவொன்றிலா வகையெய்திநின் றிறுமாக்கு மென்னிள மானனே. என்பதாம். இப்பாடலில் வந்துள்ள சாந்தை என்பது சாத்தனூர் என்பதின் மரூஉ ஆகும். 'சாந்தையூர் அணியாவடுதுறை' என்னுந் தொடர்மொழிகள் சாத்தனூரில் உள்ளது ஆவடுதுறை என்னுந் திருக்கோயில் என்பதை விளக்கி நிற்றல் ஈண்டு அறிதற்குரியதாகும். சமய குரவர்களது தேவாரப்பதிகங்களை ஆராயின், சிலதிருப்பதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குத் தனிப் பெயர்கள் இருத்தல் புலனாம். காவிரிப்பூம்பட்டினத்துக் திருக்கோயில் பல்லவனீச்சுரம் எனவும், கோவந்த புத்தூரிலுள்ள திருக்கோயில் விசயமங்கை எனவும், கருவூரிலுள்ள திருக்கோயில் ஆனிலை எனவும், சாத்த மங்கையிலுள்ள திருக்கோயில் அயவந்தி எனவும் பெயரெய்தியிருத்தலைத் தேவாரப் பதிகங்களால் அறியலாம். . பிற்காலத்தில், சில ஊர்களில், திருக்கோயிலின் பெயர் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்ப்பெயராக மாறி வழங்கப்பெற்று வருகின்றது. ஊரின் எஞ்சிய பகுதி மாத்திரம் பழைய பெயருடன் நின்று நிலவுவதாயிற்று. இதற்கு எடுத்துக் காட்டாகப் பழையாறை நகரை எடுத்துக்கொள்ளலாம்; பழைய காலத்தில், இது மிகப் பெரிய நகரமாயிருந்தது. பல்லவர், சோழர் முதலான அரசர் குடும்பத்தினர் இந்நகரில் வதிந்து வந்தனர் என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. பட்டீச்சுரம், திருச்சத்தி முற்றம், திருமேற்றளி, வடதளி, தென்றளி என்பன இந்நகரத்திலிருந்த திருக்கோயில்கள் ஆகும். இவற்றுள், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம் என்பவை தனித்தனி ஊர்களாக இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன. திருமேற்றளி என்ற திருக்கோயிலின் பெயர் 'திருமத்தடி' என்ற ஊர்ப் பெயராக மாறிப் போயிற்று. அன்றியும், இது இக்காலத்தில் தனி ஊராக • inscriptipn No:117 of 1925.