49 இவ்வறந்தாங்கி நகரத்தில்தான் முடிவுறுகின்றது. இந்நகரைச் சூழ்ந்து பெரிய மதிலும் அகழியும் அழிவுற்றுக் கிடத்தலை இன்றுங் காணலாம். இஃது ஒரு காலத்தில் அரசர் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகராயிருந்திருத்தல் வேண்டும் என்பதை இவை நன்கு புலப்படுத்துகின்றன. இந்நகரிலிருந்து முன்னாளில் ஆட்சிபுரிந்தவர்களே அறந்தாங்கி அரசு என்ற பெயருடன் நிலவிய குறுநில மன்னர்கள். இவர்கள் தொண்டைமான் என்ற பட்டமுடையோர்; பல்லவர் மரபினர்; ஆளுடையார் கோயில் என்று இந்நாளில் வழங்கப்பெறுவதும், மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் செந்நெறி அறிவுறுத்தியதும் ஆகிய திருப்பெருந்துறையில் பெரிதும் ஈடுபாடுடையோர்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவனையே தம்குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டுவந்தோர், இச்செய்திகளுள் சிலவற்றைக் காஞ்சிபுர வராதீசுவரன் ஆளுடைய தம்பிரானார் சீபாத பக்தன் என்று இன்னோரது கல்வெட்டுக்கள் கூறுவதால் அறியலாம். அன்றியும், இவர்கள் திருப்பெருந்துறையில் பல அரிய திருப்பணிகள் புரிந்து நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் விட்டுள்ள நிபந்தங் களாலும் இதனை உணரலாம். கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நம் தமிழகத்தின் பெரும் பகுதி பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது வரலாற்று ஆராய்ச்சியால் அறியப்பெற்றதாகும். முதல் ஆதித்த சோழன் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களைப் போரில் வென்று சோழமண்டலத்தையும் தொண்டைமண்டலத்தையும் கைப்பற்றினான். பின்னர், பல்லவர்களுள் சிலர் சோழ மன்னர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னர் ஆயினர்; சிலர் அவர்கள்பால் அமைச்சர், படைத்தலைவர், திருமந்திர ஓலை முதலான அரசியல் அதிகாரிகளாகவும் வாழ்ந்து வந்தனர். இங்ஙனம் வாழ்ந்து வந்த பல்லவ குலத் தலைவர்களுள் அறந்தாங்கித் தொண்டைமானும் ஒருவன் ஆவான். இத் தொண்டைமான் மரபினர் அறந்தாங்கி அரசு எனவும் வணங்காமுடித் தொண்டைமான் எனவும் அறந்தாங்கியில்புகழுடன் வாழ்ந்துவந்த செய்தி பல கட்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இன்னோரது வரலாற்றைத் தொடர்பாக அறிந்து கோடற்குரிய சான்றுகள் இந்நாளில் கிடைத்தில. ஆயினும், கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு ஒருவாறு ஆராய்ந்து முடிவு காண்பாம். புதுக்கோட்டைக்கு வடகிழக்கிலுள்ள வேசிங்கி நாட்டில் வளத்து வாழவிட்ட பெருமாள் தொண்டைமான் என்பவன் கி.பி. 1201 இல் இருந்தனன் என்று தெரிகிறது. இவனே, அறந்தாங்கித் தொண்டைமான்களுள் மிகத் தொன்மை வாய்ந்தவன். எனவே, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக் குடியினர் தம் ஆட்சியை அங்கு நிறுவியிருத்தல் வேண்டும். இவனுக்குக் பின்னர்