பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 
இந்தியப் பல்தமிழ்க் கழக அழைப்பிதழில் சாதி
பாவலரேறு ஐயாவின் விளக்க விடை மடல்
 

காரைக்குடியிலுள்ள இந்தியப் பல்தமிழ்க் கழகம் விடுத்த அழைப்பிதழில் “தமிழ்த் தோன்றல் திரு.க.வெ.சித.வே. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் (அழகப்பா கல்லூரி அறநிலையச் செயலர்) கழகத்தைத் தொடங்கி வைக்கவும், தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்கவும் இசைந்துள்ளார்கள்." என்று கண்டுள்ளது. அந்த அழைப்பிதழுக்கு நம் ஐயா (பெருஞ்சித்திரனார் அவர்கள்) விடுத்த விடை மடல்.

பேரன்புடையீர், வணக்கம்.

தாங்கள் அன்புடன் விடுத்த இந்தியப் பல்தமிழ்க் கழகத் தொடக்க விழா அழைப்பும் விளக்கத்தாள்களும் கிடைத்தன. தங்களின் அரும்பெரும் முயற்சி கண்டு பேருவகை கொண்டோம். கழகம் ஆற்றவிருக்கும் செயல்களையும், கொண்டிருக்கும் குறிக்கோள்களையும் படித்து அகமகிழ்ந்தோம். தங்களின் செயற்கரிய செயல்களுக்கு என்றும் துணை நிற்கவும் உறுதி பூண்டோம். எல்லாம் வல்ல இறைவன் இருதிறத்தானும் நின்று பேரருள் புரிய வேண்டுகின்றோம். நிற்க.

தாங்கள் விடுத்துள்ள அறிக்கையில் உள்ள எல்லாச் சொற்றொடர்களும் தங்கள் உளக்கருத்தை இனிதே புலப்படுத்தி மெய்ம்மலியுவகை செய்தனெனினும், எந்தமிழ்த் தாய்க்கு யாமென்று முன்னிற்பார் யாவரும் சொல்லவும் கொள்ளவும் மறந்த கொள்கையான, "சாதி சமயம் கட்சி என்றின்ன பிரிவுகளை மனத்தாலும் எண்ணாது, எண்ணவும் இடங்கொடாது செயலாற்றும் பண்புடையது இக்கழகம் என்பதை ஒருதலையாக நினையுங்கள்" என்ற இன்றியமையாச் சொற்றொடரே எம்மை மிகவும் மகிழ்வுறச் செய்ததும் ஆழ்ந்து எண்ணச் செய்ததுமாகும். சாதி

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/31&oldid=1164336" இலிருந்து மீள்விக்கப்பட்டது