பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

201

நீ? போலீஸ் ஆளா? போலீஸ் தானே உன்னை அனுப்பினாங்க?” என்று பூமியை நோக்கி முஷ்டியை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான்.

பூமி அவனைத் தடுக்க முயன்றதிலேயே நிலை தடுமாறித் திரும்பவும் போய் சோபாவில் விழுந்தான் மன்ருை. அதைப் பார்த்ததும் குண்டர்கள் பூமியின் மேல் பாய்ந்தார்கள்.

“தலைவர் மேலயா கையை வச்சே?” என்று அவர்கள் பூமி மேல் தாக்குதலுக்கு வந்ததும் பூமி தன் தொழிலைக் காட்டினான்.

மன்னாருவுக்கு முன் டீப்பாயில் இருந்த - பாட்டில்கள் சிதறின. பெண்கள் கூச்சலிட்டு மூலைக்கொருவராகப் பதறி ஓடினார்கள். பூமி பாய்ந்து தாக்கிய வேகத்தைக் கண்டு குண்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒற்றைக் கையால் தடுத்த வேகத்திலேயே மன்னாருவைச் சோபாவில் சுருட்டிப் போட்டிருந்தான் பூமி. வெறும் சோற்று மாடன்களான குண்டர்கள் இருவரும் அவனிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். பூமியின் சாகஸத்தைப்பார்த்து மலைத்துப் போயிருந்த மன்னாரு தன்னருகே இருந்த சுவிட்சை அமுக்கினான்.

“ஏய் மன்னாரு! இன்றைக்கு இதுபோதும். இன்னொரு நாள் மறுபடி உன்னை வந்து சந்திக்கிறேன். தயாராயிரு” என்று அவனிடம் கூறி விட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வழி தப்பிவிடாமல் ஞாபகம் வைத்திருந்தபடி வெளியேறி முகப்புக்கு வந்தான் பூமி.

முகப்பிலும் சில குண்டர்கள் அவனை வழிமறித்தனர். அவர்களைச் சமாளித்துத் தெருவில் நின்றிருந்த ஒரு டாக்ஸியில் பாய்ந்து ஏறி டிரைவரை. விரைந்து ஓட்டச்சொல்லிப் பூமி அங்கிருந்து மீண்டான். பின்னால், யாரோ மோட்டார் சைக்கிளில் துரத்துவதாகத் தோன்றியது. திரும்பி பார்த்தான். மன்னாருவின் ஆட்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி வந்துகொண்டிருந்தார்கள்