பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சாயங்கால மேகங்கள்

திருந்தது. கொஞ்சம் சிரமமானாலும் வாசகர்கள் தலைஎழுத்து. அதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.

இயல்பாகப் பூமி, தமிழ்ப் பத்திரிகைகளை அதிகம் படிப்பதில்லை. தமிழில் பாரதியார், புதுமைப்பித்தன், கு. ப. ரா போன்றவர்களின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வீக்லி, இண்டியா டு டே முதல் பல பத்திரிகைகளையும் படிப்பது அவன் வழக்கம்.

இப்படி வீட்டிலே அடைந்து கிடக்கிறானே என்று அவன் மேல் இரக்கப்பட்டுக் கன்னையன் லஸ் கார்னரிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து தள்ளியிருந்த தமிழ்ப் பத்திரிகைகள் பல இரண்டு வாரக் காலம் வெந்நீர் அடுப்புக்கு உதவுகிற அளவு போதுமானவை.

தாயின் படம் ஒன்றை என்லார்ஜ் செய்து வீட்டு முகப்பில் மாட்ட வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது. தனித்தனியான பாலிதின் உறைகளில் சேர்த்து வைத்துக் கொணர்ந்திருந்த சிங்கப்பூர் நெகடிவ்களைத் தேடிக்குடைந்து, தாய் சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் அருமையான படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான் பூமி. சாயங்காலம் அதை இராயப்பேட்டை ஹைரோடிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் கொடுத்துப் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்டான்.

கிருஷ்ணாம்பேட்டை மயானத்து முகப்பில் தாயின் இரண்டாம் நாள் காரியத்துக்காகப் போயிருந்த காலை வேளையில் சித்ராவைச் சந்தித்த பின் மறுபடி பூமி இன்று வரை அவளைச் சந்திக்க நேரவே இல்லை.

அன்று இரண்டாம் நாள் காலையில் சந்தித்தபோது தான் பாலாஜி நகரில் குடியிருப்பதாக அவள் கூறியிருந்தது, . பூமிக்கு நினைவு வந்தது. பாலாஜி நகரிலிருந்து மாம்பலத்தில் உள்ள பிரைவேட் நர்ஸரி ஸ்கூலுக்கு வேலை செய்யப் போகிறாள் என்பதை நினைத்தபோது கொஞ்சம் அநுதாபமாகக்கூட இருந்தது. தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வருகிறவர்