திராவிட நாட்டுளீர் உங்கள் செயற்கெலாம்
அறமே அடிப்படை ஆதல் வேண்டும்
அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள்
செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு
மனமா சறுக்கும் இனிய மருந்து
கசடறக் கற்க! கற்றிலார் அறிஞர்பால்
கேட்க! கேட்க! திராவிடம் மீட்க
ஒளவையார் அருளிய ஆத்திச் சூடியில்
ஒரு தொடர் தன்னை----ஒன்றுக்கான
உரையை----எப்படி ஒருவர் இலேசாய்
நினைவில் நிறுத்தி இனி துரைப்பாரோ
அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர்
முப்பால் ஆயிரத்து முன்னூற்று முப்பது
குறளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும்
நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஓர்
ஆற்றல் உடையவர்; அவர் திருக்குறள் மலர்
வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறசுவை
ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை
அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப்
பாசிப்பயற்றுமி படைப்பார் அல்லர்;
அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள்
தேன்ஆற்றி னின்று செம்பில் மொண் டளிப்பவை
குறட்பயன் கொள்ள நம் திருக்
குறள்முனி சாமி சொல் கொள்வது போதுமே!