பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

சில மன்னர்கள் தங்கள் ராஜ்யங்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவதற்காகவும் பகைவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் திடீர்த் தாக்குதலுக்குத் தற்காத்துக் கொள்ளவும் கோட்டைகளைக் கட்டிக் கொள்வதுண்டு. இது பழைய முறை என்பதற்காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

கோட்டைகள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் பயனுள்ளவையாகவும் பயனற்றவையாகவும் இருக்கலாம். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குக் கோட்டைகள் இன்றியமையாதவை. ஆனால் தன் மக்களைக் காட்டிலும் அன்னியருக்கு அதிகமாகப் பயப்படுகிறவனுக்குக் கோட்டைகள் அவசியமில்லை.

உண்மையான-மிகச் சிறந்த கோட்டை மக்களின் அன்பின் அடிப்படையில் எழுப்பப்படுவதேயாகும். ஏனென்றால் எத்தனை கற்கோட்டைகள் வைத்திருந்தாலும் மக்கள் வெறுப்புக்காளான அரசனை அவை காப்பாற்ற முடியாது.

கீர்த்தியடைய வழி :

செயற்கருஞ்செயல்களையும், தன் பராக்கிரமத்தைக் காட்டிக் கொள்வதும் போல, அரசனை மதிப்படையச் செய்வது வேறில்லை. நிர்வாகத்திலும் உயரிய தன்மையை வெளிப்படுத்தக் கூடிய செயல்கள் சிலவற்றைச் செய்வது அவனுக்குப் பெரிதும் பயனளிக்கும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அசாதாரணமான காரியத்தைச் செய்தால், அப்பொழுது அவற்றின் நன்மை தீமைக்குத் தகுந்தபடி பாராட்டி வெகுமதியளித்தலும் அல்லது தண்டித்தலும் வேண்டும். இச்செயல்கள் பற்றி எங்கும் பேசும்படியாக இருக்க வேண்டும். அரசனும் தான் மிகப்பெரியவனாகவும் மிகத் திறமையுள்ளவனாகவும் புகழ் பெற்று இருப்பதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

தன் அருகாமையில் உள்ள இரண்டு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் காலத்தில் அவன் நடுநிலை வகிக்கவே கூடாது. ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு பேரில் ஒருவர் வெற்றியடைந்தால் வெற்றியடைந்தவனுக்கே இந்த அரசன் பயப்பட வேண்டும்.