இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறுநாள், தலைமை ஆசிரியர் அந்தச் சிறுவனிடம், “நேற்று ஏன் தேகப்பயிற்சி வகுப்பிற்கு வரவில்லை?” என்று கேட்டார்.
அவன் நடந்ததை நடந்தபடி கூறனான். ஆனால், அவன் பேச்சை தலைமை ஆசிரியர் நம்பவில்லை. ஓர் அணாவோ,
இரண்டணாவோ அபராதம் விதித்தார்.
"ஐயோ, அபராதம் கட்டவேண்டுமே!” என்று அந்தச் சிறுவன் கவலைப்படவில்லை; ‘ஐயோ, தலைமை ஆசிரியர் நான் பொய் சொல்லுகிறேன் என்றல்லவா நினைத்து விட்டார்!’ என்றுதான் எண்ணி வருந்தினான். உடனே, அவனுக்கு அழுகை வந்துவிட்டது.
'நான் கவனக் குறைவாக இருந்ததால்தானே இப்படியாகிவிட்டது.? ஒருவன் உண்மை பேசிவிட்டால் மட்டும் போதுமா? போதாது. கவனமாகவும் இருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.
அன்று சிறு பையனாக இருந்தவன், பிற்காலத்தில் பெரிய மகாத்மா ஆகிவிட்டான்! அஹிம்சா மூர்த்தி, சத்திய சீலர், இந்தியர் தந்தை என்றெல்லாம் உலகம் போற்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இளமையில் நடந்ததுதான் மேலே கூறப்பட்ட நிகழ்ச்சி!20