பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவன் பல கதைகள் எழுதினான்; நாடகங்கள் எழுதினான். அவை எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. ஆனாலும், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருந்தன. "பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காமல் போனோமே!’ என்று அப்போது அவன் வருத்தினான். ஆனாலும், முயற்சியை விடவில்லை. நாளடைவில் தவறு இல்லாமல் எழுதக் கற்றுக் கொண்டுவிட்டான்.

அவன் குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் பல. அந்தக் கதைகளைப் படித்துப் படித்துக் குழந்தைகள் ஆனந்தமடைய வேண்டும் என்பதுதான் அவனது ஆசை. அந்த ஆசை வீண் போகவில்லை. அவன் பிறந்த டென்மார்க் தேசத்துக் குழந்தைகள் மட்டுமல்ல; உலகத்திலுள்ள பல தேசத்துக் குழந்தைகளும் அவனுடைய கதைகளைப் படித்து ஆனந்தம் அடைகிறார்கள். நீங்களும் அவனுடைய கதைகளைப் படித்து ஆனந்தம் அடைய வேண்டாமா?

"அவனுடைய பெயரைச் சொன்னால்தானே அவன் எழுதிய கதைகளைப் படிக்க முடியும்?"என்று கேட்கிறீர்களா?

இதோ அவனுடைய பெயரைச் சொல்லிவிட்டேன். ஹான்ஸ் கிறிஸ்தியன் ஆண்டர்சன் என்பதுதான் அவனுடைய பெயர்!

6