பக்கம்:சிலம்பின் கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சிலம்பின் கதை



கார் காலம்

அந்நகரில் கார்காலத்தில் மாலை வேளைகளில் மகளிர் சிவந்த நிறத்தில் அணிகலன்கள் அணிந்து கொண்டு விளங்கினர். இந்திரனுக்கு இது மதுரை மாநகர் என்பதை அவர்கள் தம் ஆடை அணிகளால் உணர்த்தினர். மாலை வேளைகளில் அவர்கள் தம் காதலருடன் அளவளாவினர். அவர்கள் தம் இடைக்குச் சிவந்த ஆடை அவர்கள் மேனிக்கு அழகு தந்தது; அவர்கள் தலையில் சூடிய பூக்கள் குடசம், செங்கூதாளம், குறிஞ்சி என்பனவாம். இவையும் சிவப்பு நிறப் பூக்களாகும். கொங்கைகளுக்குச் சிவப்பு நிறத்தை உடைய குங்குமம் பூசினர். செங்கோடுவேரி என்னும் பூவும் சிவப்பு நிறம் கொண்டது; அதன் பூக்களைக் கொண்டு மாலை அணிந்தனர். அவர்கள் அணிந்திருந்த மேகலையும் பவழத்தால் ஆகியது. அவர்கள் செவ் வணிகளோடு தம் காதலருடன் கழித்த காலம் அது; மதுரை மாநகர் கார்காலத்தில் விளங்கிய தோற்றம் இது; ஒரே நிறத்தில் அவர்கள் திறம் விளங்கியது. இது ஒரு தனிச் சிறப்பாக விளங்கியது. இது கார்காலத்து மகளிர் மகிழ்வுடன் இருந்த நிலை.

கூதிர்க் காலம்

அடுத்தது கூதிர்காலம்; மேகம் தவழும் மாடங்களில் அகில் கட்டையை எரித்து நறும் புகை உண்டாக்குவர். அதில் அவர்கள் தம் காதலருடன் இருந்து குளிர்காய்வர். மாடத்துச் சாளரங்களை எல்லாம் அடைத்துக் குளிர் காற்று வராது தடைப் படுத்துவர். அடக்க ஒடுக்கமாக அமர்ந்து அவ்அறைகளில் குளிருக்கு இதமாகத் தம் காதலரோடு இணைந்து தழுவி மகிழ்ந்தனர். அத்தகைய சிறப்புடையது கூதிர்காலம். அந்த நாட்களை அவர்கள் எண்ணிப் பார்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/89&oldid=936402" இலிருந்து மீள்விக்கப்பட்டது