பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. மூன்று உண்மைகள்

செங்குட்டுவனோடு மலைவளம் காணச் சென்ற தண்டமிழ்ப் புலவராகிய சாத்தனார் அவனுடன் வஞ்சிமா நகர் வந்தார். தம்முடைய நண்பராகிய இளங்கோவடிகளைக் கண்டு வரலாமென்று அவர் இருந்த குணவாயிற் கோட்டத்துக்குச் சென்றார். அப்போது அங்கே குன்றில் வாழும் மக்கள் பலர் கூடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். இளங்கோவடிகள் அவர்கள் சொல்வதை மிக்க ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அடிகள் சாத்தனாரைக் கண்டவுடன், “வாருங்கள், வாருங்கள்! எப்போது வந்தீர்கள்? இப்படி அமருங்கள்” என்றார்.

“நான் வந்து சில நாட்கள் ஆயின. மன்னர் பெருமானுடன் மலைவளம் காணச் சென்றிருந்தேன். இவர்களைப் பார்த்தால் மலையில் வாழும் மக்களைப் போலத் தோற்றுகிறார்கள். மலைவளம் காணப் போயிருந்தபோது இவர்களைப் போன்றவர்களை அங்கே கண்டோம். அவர்கள் தாங்கள் கண்ட ஒர் அற்புத நிகழ்ச்சியைச் சொன்னார்கள்” என்று சொல்லி அமர்ந்தார் புலவர்.

“இங்கேயும் இவர்கள் ஏதோ அற்புத நிகழ்ச்சியைத்தான் சொல்ல வந்தார்கள். சொல்லத் தொடங்கும்போதே நீங்கள் வந்துவிட்டீர்கள். நீங்களும் கேளுங்கள்” என்று சொன்ன இளங்கோ, எதிரே நின்றிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கண்டதைச் சொல்லுங்கள்” என்றார்.