பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பணித்தார்கள்” என்று சொல்லி நிறுத்தினான் சஞ்சயன்.

“என்ன விண்ணப்பம்? அஞ்சாமல் தெளிவாகச் சொல்லுங்கள்” என்று சேரன் ஏவினான்.

“தாங்கள் வடதிசைக்குச் செல்வது, இமயத்தில் கடவுட்சிலை வடிக்க ஒரு கல்லை எடுத்துக் கொணர்வதற்காக என்றால், தங்களுக்கு இந்தத் தொல்லை வேண்டாமே என்று தெரிவிக்கச் சொன்னார்கள். ‘நாங்களே இமயம் சென்று ஒரு கல்லை உரிய முறையில் எடுத்துக் கொணர்ந்து, சிலை வடித்துக் கங்கையில் நீர்ப்படை செய்து கொடுப்போம். அது எங்களால் முடியும் காரியம்’ என்று தங்களிடம் பணிந்து சொல்லச் சொன்னார்கள். திருவுள்ளக் குறிப்பு எப்படியோ அறியேன்” என்று சஞ்சயன் கூறி முடித்தான்.

செங்குட்டுவன் புன்னகை பூத்தான்; “எனக்குத் தோழர்களாக இருந்து துணைபுரிவதாகச் சொன்னதற்கு நன்றி பாராட்டுகிறேன். ஆனால் நான் இந்த வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டதற்கு இமயத்திலிருந்து கல்லைக்கொண்டு வருவது மட்டும் காரணம் அன்று. வடநாட்டில் உள்ள பாலகுமரன் என்ற வேந்தனுக்குப் புதல்வர்களாகிய கனகன், விசயன் என்ற இருவர் வாய்த்துடுக்கு மிக்கவர்களாம். ஒரு கல்யாணத்தில் ஏதோ பேசினார்களாம். தமிழ் நாட்டு மன்னர்களின் ஆற்றலை அறியாமல் ஏதோ உளறினார்களாம். அவர்களுக்கு அறிவு புகட்டவே இந்தச் சேனையோடு புறப்பட்டேன்” என்றான்.