பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

179


பாண்டிய வேந்தை நீள வாழ்த்திக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான். அந்த நீண்ட நெடிய வாழ்த்து வருமாறு:

"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றுாழி உலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி
திங்கள் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பில் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெரு மழை எய்தா தேகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதிர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந்தோனை". (11:15:31)

முன்னர் ஆண்டபாண்டியர் குல மன்னர்களின் வெற்றிச் செயல்கள் இங்கே கூறப்பட்டுள்ளன. ஓர் அரசனுக்கு, அவனுடைய முன்னோர்களின் புகழ்களை எல்லாம் உரியனவாகச் சேர்த்துச் சொல்லுதல் ஒருவகை மரபு. அந்த முறையில், சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த பாண்டியன் நெடுஞ்செழியன் தன் முன்னோர்களின் வெற்றிகளை எல்லாம் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவை: கங்கையும் இமயமும் கொண்டமை, வேல் எறிந்து கடலை வற்றும்படிச் செய்தமை, இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டமை, இந்திரன் முடிமேல் வளை எறிந்தமை, முகிலைத் தளையிட்டமை முதலியன. இவ்வரலாறுகளைத் திருவிளையாடல் புராணத்தில் விரிவாகக் காணலாம்.