பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

235


எனக் கண்ணகியையே முதலில் குறிப்பிட்டுள்ளார். இங்கே கண்ணகியின் நடுக்கத்தை அச்சக் குறிப்பாகக் கொள்ளாமல் இரக்கக் குறிப்பாகக் கொள்ளல் வேண்டும்.

கண்ணகியின் கடவுள் கொள்கை

கனாத்திறம் உரைத்த காதை

கணவனைப் பிரிந்து தீய கனாக் கண்டு வருந்திக் கொண்டிருந்த கண்ணகியை நோக்கி, அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பவள் பின்வருமாறு கூறினாள்: கண்ணகியே! நீ உன் கணவனால் வெறுக்கப்படவில்லை. முன் பிறப்பில் கணவனைக் காப்பதற்காகச் செய்ய வேண்டிய நோன்பைச் செய்யத் தவறினாய். அதன் விளைவே இது. இதினின்று தப்ப வேண்டுமாயின், காவிரியின் கூடல் (சங்கமத்) துறையை அடுத்தாற் போல் உள்ள சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகளிலும் முறையே நீராடிப் பின்பு காமவேள் கோட்டம் சென்று வணங்கின், இம்மையில் கணவனைப் பிரியாது கூடி வாழ்ந்து, மறுமையிலும் இன்ப உலகம் சென்று கணவனுடன் கூடி இன்பம் துய்க்கலாம். கணவனைப் பிரிந்த மகளிர் இவ்வாறே செய்வர். அதனால், நாமும் அப்பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழலாம் என்று சூழ்வுரை (ஆலோசனை) கூறினாள். உடனே கண்ணகி, அவ்வாறு நீராடிக் கடவுளைத் தொழுதல் எம் வழக்கம் அன்று என்றாள்.

“ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்

பீடன்று என இருந்த பின்னரே...” (63, 64)

என்பது பாடல் பகுதி. (அணியிழை = தேவந்தி. ஆயிழையாள் - கண்ணகி) அவ்வாறே நீர் ஆடி வணங்குதல் பீடு (பெருமை - மேன்மை) ஆகாது என்பது கருத்து,