பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

295


சைவ சமயக் குரவர் நால்வருள், சுந்தரர் கோயில் பூசனை புரியும் ஆதிசைவப் பார்ப்பனர் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையான முடிபாகும். நாவுக்கரசர் வேளாளர். மற்ற சம்பந்தரும் மாணிக்க வாசகரும் தமிழ் அந்தணர் ஆவர். பெரிய புராணத்தில் சம்பந்தரைப் பற்றிக் கூறுமிடத்தில் என்னதான் வேத வேள்விகள் இணைக்கப்பட்டிருப்பினும் சம்பந்தர் தமிழ் அந்தணரே; மாணிக்கவாசகரும் அத்தகையோரே. ஆரியர் வழிவந்த பார்ப்பனர்களுள் யாராவது, சம்பந்தர் - ஞான சம்பந்தர் - மாணிக்கவாசகர் - திருவாதவூரர் என்னும் பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனரா? எனக்குத் தெரிந்தவரைக்கும் இல்லை. ஒருவேளை எங்கேயாவது குறைந்த அளவில் - ஒரு சிலர் மட்டுமே இருக்கலாம். குருக்கள் என்னும் ஆதி சைவத் தமிழ் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தன் என்னும் பெயரை வைத்துக் கொள்வதுண்டு. பார்ப்பனர்கள் திருநாவுக்கரசர் என்னும் பெயரின் பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்கள். குருக்கள் மரபினராகிய அப்பூதி அடிகளே, தம் வீட்டுப் பொருள்கள் பிள்ளைகள், தண்ணிர்ப் பந்தல் முதலிய உயர்திணை - அஃறிணையாம் அனைத்துப் பொருள்கட்கும் திருநாவுக்கரசர் என்னும் பெயர் சூட்டினார்.

மற்றும், பண்டு, பார்ப்பனர்கள் தமிழர்க்குத் தோழர்களாயிருந்து செயலாற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியலில், பார்ப்பனத் தோழர்க்கு உரிய கிளவிகள் கூறப்பட்டுள்ளன.

“காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய” (36)