பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. சேது மன்னர் வழியில் செந்தமிழ்ப் பணி

 

சேதுபதி மரபினரான சிவகங்கை மன்னர்களும், தமிழுக்கு தளராது உதவி உள்ளனர். தமிழ்ப்புலவர்களைப் பெருமைப்படுத்திப் பொன்னும் பொருளும் வழங்கியதுடன் அவர்களது வாழ்க்கை, வறுமையில் முடிந்து விடக்கூடாது என்ற கருத்தில் தமிழ்ப் புலவர்களுக்கு பேரும் ஊரும் அளித்து பெருமைப்படுத்தினர். சிவகங்கை தேவஸ்தான ஆவணங்களில் இருந்து, சிவகங்கைத் தன்னரசின் முதல் மன்னரான சசிவர்ணத் தேவர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் வழியினரான சிற்றம்பலக் கவிராயருக்கு கி.பி.1732-ல் ஜீவித மான்யமாக, காடன் குளம் என்ற கிராமத்தை தானமளித்தார் எனத் தெரிகிறது. இந்தக் கவிராயரது மைந்தரான மங்கைபாகக் கவிராயருக்கு கி.பி. 1733-ல் மேலக் கொன்னக்குளம் என்ற கிராமத்தை முற்றுட்டாக வழங்கிய செய்தியும் உள்ளது.[1] இவர்களது வழியினர் பின்னர் பிரான்மலையில் வாழ்ந்தனர் என்பதும் அவர்களில் ஒருவரான குழந்தைக் கவிராயரும் இந்த மன்னரால் ஆதரிக்கப்பட்டார் என்ற செய்திகளும் கிடைத்துள்ளன. இந்த மன்னர் மீது வண்டோச்சி மருங்கணைதல் என்ற துறையில் சசிவர்ணர் ஒருதுறைக் கோவை நூல் என்றும் படைக்கப்பட்டுள்ளது.

இந்த மன்னரது மாமனாரான முத்து விசைய ரகுநாத சேதுபதி மன்னர்மீது பண விடுதூது என்ற சிற்றிலக்கியத்தைப்பாடி பரிசிலும் பாராட்டும் பெற்ற மதுரை சொக்கநாதப் புலவரையும் இந்த மன்னர் ஆதரித்துள்ளார். அந்தப் புலவருக்கு ஜிவித மான்யமாக செங்குளம் என்ற ஊரை இந்த புலவருக்கு தானமாக வழங்கி செந்தமிழ் காத்த சேது மரபினர் என்ற புகழுக்குரியவராக விளங்கினார்.


  1. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்.