1. சிவகங்கைச் சீமை அறிமுகம்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்பது தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளைச் சுட்டும் பழம்பாடல் ஆகும். கடந்த ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் பெரும்பகுதி, இந்த பரந்த நிலப்பரப்பை ஆண்டு வந்த முடியுடை மன்னர்கள் சேரன் அல்லது பொறையன், சோழன் அல்லது வளவன், செழியன் அல்லது பாண்டியன் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இந்த முத்தமிழ் மன்னர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனது நாடு, தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்து இருந்தது. சோழ நாட்டின் தென் எல்லையை வட வரம்பாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையான மேற்குத் தொடர் மலையை மேற்கு எல்லையாகவும், வங்கக் கடலின் விரிந்த கரையை கிழக்கு எல்லையாகவும் கொண்டிருந்தது.
காலச் சுழற்சியில், பாண்டியரது வாளின் வலிமையைப் பொறுத்து இந்த எல்லைகளில் பெருக்கமும், சுருக்கமும் ஏற்பட்டதை வரலாற்றால் அறிகின்றோம். மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி சிதம்பரத்தில் வீராபிஷேகம் செய்து கொண்டான். இன்னொரு பாண்டியன் வடக்கே, நெல்லூர் வரை சென்று வாளால் வழி திறந்தான், எனப்புகழப்பட்டான்.[1] கோச்சடையான் குலசேகர பாண்டியன் குடநாட்டை வென்று கொல்லங்கொண்டான் என்ற விருதைப் பெற்றான்.[2] இவர்களது பழமையான கோநகரான கபாட புரத்தையும் தமிழ் மணக்கும் பொதிகை மலையையும், வங்கம் தரும் முத்துக்களையும், வால்மீகி இராமாயணம் சிறப்புடன் பேசுகின்றது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன், பாண்டியனது மகளை