பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 219


மற்றும், இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தான ஆவணங்களைப் பொறுத்த வரையில், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இவற்றில் மிகப் பெரும்பாலான பயனுள்ள ஆவணங்கள் அழிந்து விட்டன. அல்லது அழிக்கப்பட்டு விட்டன. ஏனைய ஆவணங்களில் கிடைக்கக் கூடிய செய்திகள் வரலாற்றுக்குப் பயன்படுவது மிகவும் குறைவு. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரது ஆவணங்கள் மட்டுமே அண்மைக் காலத் தமிழக வரலாற்றுக்குக் கை கொடுத்து உதவக் கூடியதாக உள்ளன. இதனை அரிச்சந்திரனின் வாக்கு என ஏற்றுக் கொள்ளலாமா என இந்த நூல் ஆசிரியர் இடித்துரைப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகவே தெரிகிறது. காரணம் நூலாசிரியருக்குத் தமிழக அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களில் ஒரு பகுதியைக் கூடப் படித்துத் தெளிவு பெறுவதற்கான வாய்ப்பும், வசதியும் கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

பேராசிரியர் கே.இராஜையன் போன்றவர்கள் ஆங்கில ஆதிக்கக் காலத் தமிழகத்தைப் பற்றிப் பல நூல்கள் வரைந்து, தமிழக வரலாற்றிற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள் என்றால், அவரது எழுத்துக்களுக்கு முழுவதும் ஆதாரமாக அமைந்துள்ளவை சென்னை ஆவணக் காப்பக ஆவணங்களும், ஆவணக் காப்பக நூலக நூல்களும்தான் அவற்றிலும் கிழக்கிந்தியக் கும்பெனியின் அலுவலர்களாக இருந்த மெக்கன்சி போன்றவர்கள், தங்களது பணியின் பொழுது சென்ற ஊர்களில் கண்டவைகளையும் கேட்டவைகளையும், பிறரைக் கொண்டு வரையச் சொல்லி சேகரித்து வைத்துள்ள எழுத்துச் சுவடிகளும் மேஜர் விபார்ட், கர்னல் வெல்ஷ், ராபர்ட் ஊர்மே, ஆகிய கும்பெனியாரது ராணுவத் தளபதிகள் அவர்கள் போர்ப் பணிகளை மேற்கொண்ட பொழுது, அப்பொழுதைக்கு அப்பொழுது வரைந்து அனுப்பிய விவரமான அறிக்கைகள், தளபதி பானர்மேன், தளபதி புல்லர்டன், தளபதி ரீட், தளபதி வில்சன் ஆகியோரது நீண்ட அறிக்கைகள், மற்றும் கும்பெனி கலெக்டராகப் பணியாற்றிய மக்ளாயிட், லூவிங்டன், ஹுர்திஸ், மன்றோ ஆகியவர்கள் கும்பெனித் தலைமைக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகியவை பதினெட்டாவது நூற்றாண்டு தமிழக வரலாற்றை வரைவதற்கு, இன்றியமையாத, தவிர்க்க முடியாத வரலாற்றுத் தடயங்களாகும்.

இவை தவிர, சென்னைக் கோட்டையில் கும்பெனி கவர்னராகப் பணியாற்றிய மக்கர்ட்னி போன்றோர் கடிதங்களும் தமிழக வரலாற்றிற்குத் துணை புரியும் ஆவணங்களாகும். இந்த ஆவணங்களில் கண்ட வரலாற்றுச் செய்திகளை ஏற்க மறுப்பதும், இந்த ஆவணங்களை ஆக்கிரமிப்பார்களது புனைந்துரையாகக் கொண்டு தீண்டத் தகாதவையாக ஒதுக்கி விட்டு வரலாறு எழுத முனைவதும் அரங்கின்றி வட்டாடிய விந்தைச் செயலாகத்தான் அமையும். அத்துடன் இது நம்மை நாமே